சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய டயானா. இவரது தந்தை ஜெகதீஷன் தொழில் செய்து வரும் நிலையில் டயானாவின் அண்ணன் சர்வேஷ் தந்தைக்கு உதவியாக இருந்து வந்திருக்கிறார். அப்போது தன்னுடன் கல்லூரியில் படித்த புழல் லிங்கம் தெரு பகுதியை சேர்ந்த கிளாரன்ஸ் சுதா தம்பதியின் மகனான 23 வயதுடைய அம்ரோஸ் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது நட்பானது நாளடைவில் காதலாக மாறி இருவரும் தொடர்ந்து மூன்று வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர்.
இவர்களது காதல் டயானா வீட்டிற்கு தெரிய வர இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, காதலை கைவிட சொல்லி வற்புறுத்தி வந்திருக்கின்றனர். இருப்பினும் காதலர்கள் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த டயானாவின் தந்தை ஜெகதிஷன் கடந்த ஆண்டு (நவம்பர் 22) ஆம் தேதி தனது மகளை மீட்டுத் தருமாறு புழல் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் புழல் காவல்துறையினர், இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தபோது டயானா மேஜர் என்பதும் அவரது விருப்பத்தின் பேரிலேயே காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரது பெற்றோரை சமாதானம் செய்த காவல்துறையினர் டயானாவை காதல் கணவனுடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மகள் டயானா கர்ப்பம் அடைந்ததை கேள்விப்பட்டு அவரது தந்தை வயிற்றில் உள்ள கருவை கலைக்க சொல்லி மிரட்டுவதாகவும் தனது காதல் கணவர் அம்ரோஸ் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என இளம் பெண் டயானா தெரிவித்துள்ளார். மேலும் டயானாவின் தந்தை மட்டுமல்லாது அவரது அண்ணனும் தொடர்ந்து அம்ரோஸ்ஸை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் உயிருக்கு பயந்து அம்ரோஸ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு பணம் பற்ற குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டயானாவின் பெற்றோர்கள் அம்ரோஸ் பெற்றோரிடம் 50 லட்சம் பணம் அளித்து டயானாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ய கூறியதாகவும் சொல்லப்படுகிறது. காதலன் மீது பொய் புகார் அளித்த தந்தை தனது வயிற்றில் உள்ள கருவை கலைக்க சொல்லி மிரட்டுவதாக கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தெரிவித்துள்ள புகாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.