
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே பூவன் குடியிருப்பு பகுதியில் உள்ள சம்ப குளத்தில் கடந்த (செப் 11) ஆம் தேதி அன்று தலையில்லாத நிலையில் பச்சிளம் குழந்தை பிணம் மிதந்தது இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை குளத்தில் வீசி கொன்றிருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் உருவானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் குழந்தையை கொன்ற கொடூர தாய் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். அதன்படி யாருக்கேனும் சமீபத்தில் குழந்தை பிறந்ததா? திடீரென குழந்தை காணாமல் போய் உள்ளதா? என்பதை அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கலாம் என போலீசார் அறிவித்தனர்.
தொடர்ந்து சுற்றுவட்டார மருத்துவமனைகளில் குழந்தையை பெற்றெடுத்தவர்கள் யார், யார் என்ற விவரத்தையும் சேகரித்தனர். இந்நிலையில் போலீசார் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்து சமீபத்தில் அவரிடம் குழந்தை இல்லாமல் இருந்த சந்தேகத்திற்கு இடமான 38 வயதுடைய ரேகா என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது ரேகா முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார் எனவே போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. எனவே போலீசார் ரேகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தான் பெற்ற குழந்தையை ரேகா இரக்கமின்றி கொன்றது தெரியவந்துள்ளது.
விசாரணையில் ஈத்தாமொழி அருகே அம்மச்சியார்கோவிலூரை சேர்ந்த ரேகா தற்போது ஈத்தாமொழி புதூர் சிவசெல்வபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். ரேகாவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரேகா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி ரேகா கர்ப்பமடைந்துள்ளார். பின்னர் குழந்தை பிறந்த நிலையில் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தனக்கு அவமானம் என ரேகா நினைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் குழந்தையை கொன்று விடலாம் முடிவு செய்த ரேகா இரக்கமின்றி குழந்தையை கழுத்தறுத்து கொன்ற அவர் குழந்தையின் பிணத்தை குளத்தில் வீசியுள்ளார். இதனை யாரும் பார்க்காததால், இந்த விவகாரத்தை மூடி மறைத்து விடலாம் என ரேகா நினைத்துள்ளார். ஆனால் குளத்தில் வீசிய குழந்தை பிணமாக மிதந்ததால் ரேகா போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ரேகாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பிறந்த குழந்தை குளத்தில் சடலமாக மிதந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.