கன்னியாகுமரி மாவட்டம், ஆத்திகாட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் 511 வயதுடைய செல்வி. இவர் விவேகானந்தபுரம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு, 31 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடன் நேற்று முன்தினம்(செப் 17) காலை அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று(செப் 18) மாலை சுமார் 3 மணியளவில் செல்வியுடன் அறையில் தங்கியிருந்த நபர் மட்டும் பதற்றத்துடன் விடுதியை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது, செல்வி படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து விடுதி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அறையில் நடத்தப்பட்ட சோதனையில், செல்வியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி மூச்சுத்திணறடித்ததற்கான தடயங்கள் இருந்துள்ளது மேலும், அவரது கம்மல்கள் உள்ளிட்ட நகைகள் காணாமல் போனதும் தெரியவந்தது. எனவே செல்வியுடன் அறையில் தங்கியிருந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேக நபர் பேருந்தில் ஏறி தப்பிச் சென்றது பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதில், அவர் பேருந்தில் கோயம்புத்தூர் நோக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் விரைந்து சென்று, அங்கு சந்தேக நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய செல்வராஜ் என்பது தெரியவந்தது. அவர் டிரைவராக பணியாற்றி வருவதாகவும், தனியாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் செல்வியை சந்தித்து அவருடன் பழகி பின்னர் தனிமையில் இருக்க கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் செல்வராஜ் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், தன்னிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை செல்வி எடுத்துக்கொள்ள முயன்றதாகவும், இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் செல்வியின் கழுத்தை நெரித்ததாகவும், பின்னர் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து செல்வியிடம் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து செல்வராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான முழு காரணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட செல்வராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.