“நடுக்காட்டில் இருந்த பெண்ணின் சடலம்” - காதறுத்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்.. இவ்வளவும் நடந்தது வெள்ளி கொலுசுக்காகவா?

மூலக்கொல்லை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள மரத்தில் கட்டி விட்டு, 100 நாள் ஏரி வேலைக்கு சென்று உள்ளார்...
“நடுக்காட்டில் இருந்த பெண்ணின் சடலம்” - காதறுத்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்.. இவ்வளவும் நடந்தது வெள்ளி கொலுசுக்காகவா?
Admin
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே மேல் சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி 55 வயதுடைய கோவிந்தம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள் உள்ள நிலையில் நால்வருக்கும் திருமணம் நடைபெற்று தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவிந்தம்மாளின் கணவரான முருகன் உடல்நலக்குறைவால் இறந்து விட, தாய் கோவிந்தம்மாள் தனது மகனான மணிகண்டன் வீட்டில் தங்கி அருகில் உள்ள காடுகளில் மாடுகள் மெய்தும் அரசின் ஏரி வேலைக்கு சென்று வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த (நவ 24) ஆம் தேதி காலை கோவிந்தம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள மூலக்கொல்லை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள மரத்தில் கட்டி விட்டு, 100 நாள் ஏரி வேலைக்கு சென்று உள்ளார். பின்னர் மாலை 4.30 மணியளவில் ஏரி வேலை முடிந்த பிறகு வழக்கம் போல, தனது மாடுகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதாக சக வேலையாட்களிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை 7 மணியாகியும் வீட்டிற்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

Admin

இதனால் சந்தேகமடைந்த கோவிந்தம்மாள் மகன் மணிகண்டன், அருகில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து அம்மா உங்க வீட்டுக்கு வந்தார்களா? என விசாரித்துள்ளார். கோவிந்தம்மாள் அவரது உறவினர் வீட்டிற்கு செல்லாத நிலையில் அதிர்ச்சியடைந்த மகன் அவர் வேலை செய்த இடம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று தேடியுள்ளார். பின்னர் மாடு மேய்ந்த இடங்களில் சென்று பார்த்தபோது அங்கு கோவிந்தம்மாள் காதறுக்கப்பட்ட நிலையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

மேலும் கோவிந்தம்மாளின் காதில் இருந்த அரை சவரன் தங்க கம்மல் கழட்டப்பட்டிருந்ததும், அதே போல் காலில் இருந்த வெள்ளிக்கொழுசு கழட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக பர்கூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் பிற போலீசார் உயிரிழந்த கோவிந்தம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகன் மணிகண்டனிடம் புகாரை பெற்ற பர்கூர் போலீசார், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்தனர்.

Admin

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் குற்றவாளியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நகைக்காக தான் கோவிந்தம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடு மேய்க்க சென்ற பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com