
மதுரை மாவட்டம், அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பகலவன். இவர் வண்டியூர் பகுதியில் தினமும் காலை மாலை வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே போல கடந்த (ஆக 04) தேதி மாலை வாக்கிங் சென்றவரை வண்டியூர் பெரிய நாச்சியார் மஹால் அருகில் பின் தொடர்ந்து வந்த மதுரை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த ராம்குமார், கல்மேடு பகுதியை சேர்ந்த அருண்பாண்டி, ஆண்டார்கொட்டாரம் மணிமாறன் ஆகிய மூவரும் சேர்ந்து வழக்கறிஞர் பகலவனுடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுள்ளனர்.
பின்னர் மூவரும் வழக்கறிஞர் பகலவனை அருகில் இருந்த கம்பு மற்றும் கற்களை வைத்து தாக்கியுள்ளனர். இதில் தலை மற்றும் காது பகுதியில் படுகாயம் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மூவரும் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பலத்த காயத்துடன் இருந்த வழக்கறிஞரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அந்த பகுதிக்கு வழக்கறிஞர் பகலவனின் உறவினர் முத்துராம் என்பவர் வந்தபோது அவரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் பகலவனின் மனைவி சியாமளா அளித்த புகாரின் கீழ் வழக்கறிஞரைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தப்பியோடிய ராம்குமார், அருண்பாண்டி, மணிமாறன் ஆகிய மூவரையும் அண்ணா நகர் காவல்துறையினர் கைது செய்தனர்
இந்நிலையில் பலத்தகாயத்துடன் சிகிச்சையில் இருந்த வழக்கறிஞர் பகலவன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மதுரையில் வாக்கிங் சென்ற வழக்கறிஞரை கல்லால் தாக்கிய சம்பவத்தில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.