
மதுரை மாவட்டம், பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான கருமலை இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கருமலை அவரது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பெருங்குடியை சேர்ந்த முனீஸ்வரன் என்பரை போக்குவரத்து நகர் பகுதியில் வெட்டி படுகொலை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ்வரனின் தம்பி தங்கேஸ்வரன் கருமலையை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளனர்.
எனவே முனீஸ்வரன் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த கருமலை மற்றும் அவரது சகோதரர் இருளப்பன் ஆகியோரை பெருங்குடி போலீசார், பெருங்குடியில் தங்க வேண்டாம் வெளியூர் சென்று தாங்கிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதனை அடுத்து கீரைத்துறை இருளப்பன் கோவில் தெரு பகுதியில் இருவரும் தங்கி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் கருமலை மீது பெருங்குடி போலீசார் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர், இந்த வழக்கில் இருந்து கருமலை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பிணையில் வந்துள்ளார்.
கருமலை சிறையிலிருந்து வெளியே வந்த தகவலை தெரிந்து கொண்ட முனீஸ்வரன் குழுவினர் பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்தனர். நேற்று மாலை பெருங்குடி அம்பேத்கர் நகரில் வசிக்கும் நண்பர் பாலாவை சந்திக்க கருமலை வந்துள்ளதாக முனீஸ்வரன் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. கருமலை பெருங்குடிக்கு வந்த தகவலை தெரிந்து கொண்ட எதிர் குழுவினர் இரண்டு பைக்கில் ஆறு பேர் கொண்ட கும்பலாக வந்து கருமலையை சராமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தலை, கழுத்து மார்பு போன்ற பகுதிகளில் பலத்த வெட்டு காயமடைந்த கருமலை சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் இந்த தாக்குதலில் கருமலையின் நண்பர் பாலமுருகன் பலத்த காயங்களுடன் தப்பி ஓடினார்.கருமலை வெட்டி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயற்சித்தனர், ஆனால் கருமலையின் உடலை எடுக்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை கருமலை உடலை ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு விசாரணை செய்த பெருங்குடி போலீசார் முதற்கட்ட விசாரணையில் வலையபட்டி பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருந்த முகமது அல்தாபி (வயது 19 )மற்றும் சாய்ராம் (வயது 17) ஆகிய இருவரையும் கைது செய்தனர் விசாரணையில் கருமலை கொலை சம்பவத்தில் மொத்தம் ஆறு பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் பெருங்குடி கணேசுபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராம் மகன் சிவகுமார் என்ற கோழி சிவா (வயது 28) தனுஷ்கோடி மகன் முத்துமணி (வயது 35), முருகன் மகன் பாலமுருகன் (எ) சர்க்கரை பாலமுருகன் (வயது 28) மற்றும் பெருங்குடி பகுதியை சேர்ந்த கருப்பு மகன் தங்கமுத்து (வயது 17) ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசரின் முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது.
கருமலை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் மற்ற நான்கு பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கருமலை கொலையில் ஈடுப்பட்ட ஆறு குற்றவாளிகளில் இருவர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.