

கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டம் எல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய ரஞ்சிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு குழந்தை உள்ளது. அஸ்வின் வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரஞ்சிதா தனது கணவர் அஸ்வினை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில் ரஞ்சிதாவிற்கு அரசு பள்ளியில் சத்துணவு மேற்பார்வையாளர் வேலை கிடைத்துள்ளது. எனவே தாய் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது ரஞ்சிதாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ரஃபிக் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஃபிக் திருமணமான நிலையில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரஃபிக் ரஞ்சிதாவை திருமணம் செய்து கொள்ள அவரது வீட்டில் கேட்டபோது அதற்கு ரஞ்சிதாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். மேலும் ரஞ்சிதாவிடம் ரஃபிக் “உன் குழந்தையை விட்டு வந்துடு நீ எனக்கு மட்டும் தான் சொந்தம், நான் உன்னை நல்ல பார்த்துக்கிறேன்” என கூறியுள்ளார். எனவே ரஞ்சிதாவும் தனது குழந்தைக்காக ரஃபிக் உடனான திருமணத்தை மறுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ரஃபிக் உடன் பேசுவதையும் தவித்து வந்துள்ளார்.
இதனால் கோபத்தில் இருந்த ரஃபிக் கடந்த (ஜன 02) ஆம் தேதி வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த ரஞ்சிதாவை வழிமறித்து அவரிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதும் ரஞ்சிதா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரஃபிக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஞ்சிதாவின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இதை பார்த்த அப்பகுதியில் இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் ரஞ்சிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த றஜிதா நேற்று உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஃபிகை தேடி வந்தனர். இந்நிலையில் உத்தர கன்னட பகுதியில் உள்ள ஒரு காட்டில் ரஃபிக் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு மறுத்த காதலியை கொன்றுவிட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.