ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜிஹிரா கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது தந்தை வழி அத்தை மகனான தனது முறை மாமனை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவ்வாறு தந்தை வழி முறை மாமனை திருமணம் செய்து கொள்வது அவர்களின் கிராம வழக்கத்தின் படி தவறான செயலாக கருதப்படுகிறது. எனவே இருவரும் தங்களது வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிள்ளைகளின் வாழ்கை என சில உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் இவர்களை ஏற்றுக் கொண்ட நிலையில் வேறு சில உறவினர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளாமல் சுத்திகரிப்பு சடங்கு என்ற பெயரில் கலப்பையில் மாடுகளை கட்டி நிலத்தை உழுவது போல மாடுகளுக்கு பதிலாக ஏர் கலப்பையில் இவர்களை கட்டி கிராம மக்கள் முன்னிலையில் நிலத்தை உழுது சடங்கு என்ற பெயரில் காதலர்களை சித்ரவதை செய்துள்ளனர்.
இதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், இதனை பார்த்த ராயக்கடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாதி குமார் தலைமையிலான காவலர்கள் நேரடியாக கிராமத்திற்கு சென்று இதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே கிராமத்தில் ஜனவரி மாதம் வேறு ஒரு ஜோடிக்கு சமுதாயம் மாறி திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு சுத்திகரிப்பு சடங்கு என்ற பெயரில் ஊர் முன்னிலையில் மொட்டை அடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இது போன்ற மனித உரிமை மீறல்கள் அந்த கிராமத்தில் சுத்திகரிப்பு சடங்கு என்ற பெயரில் நடந்து வருவதால் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.