
சென்னை மாவட்டம், ஓட்டேரி பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான சந்தீப் பட்டேல். இவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர்களான புளியந்தோப்பு கே எம் கார்டன் ஆறாவது தெருவை சேர்ந்த 25 வயதான கோபிநாத் மற்றும் 29 வயதான கௌதம் ஆகிய மூன்று பேரும் தங்களது நண்பரான மூர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்று ஓட்டேரி டோபிகானா ஹவுசிங் போர்டு குடிசைப்பகுதி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஆனந்த் என்கின்ற பாக்ஸர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் வந்துள்ளனர். பட்டேலின் நண்பரான மூர்த்திக்கும் பாக்ஸர் ஆனந்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. அப்பொழுது மூர்த்தி என்பவருக்கும் பாக்ஸர் ஆனந்த் என்பவருக்கும் ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சனை குறித்து பாக்ஸர் ஆனந்திடம் மூர்த்தியின் நண்பர்கள் நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்த பாக்ஸர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் எதிர் தரப்பினரை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் சந்தீப் பட்டேல். கோபிநாத். கௌதம் ஆகிய மூன்று பேருக்கும் சரமாரி வெட்டு விழுந்தத்தில் மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார் மூன்று பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி எஸ்.வி நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான பிரான்சிஸ். ஓட்டேரி டோபி கானா பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஹென்றி குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் தப்பித்து ஓடும் போது ஹென்றி குமாருக்கு கீழே விழுந்ததில் வலது கால் உடைந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் பாக்ஸர் ஆனந்த் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.