

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் 70 வயதான கருப்பையா. இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். கருப்பையாவின் மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி அனைவரும் வெளியூரில் வாழ்ந்து வரும் நிலையில் கருப்பையா மற்றும் அவரது மனைவி அழகம்மாள் அவர்களது ஊரில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் முதியவர் கருப்பையாவின் நெருங்கிய உறவினரான சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, இருமதி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் 52 வயதான மாசிலாமணி என்பவருக்கு திருமணமாகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மாசிலாமணி தனக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்க்க சொல்லிக் கேட்டு உறவினரான முதியவர் கருப்பையாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். வரன் பார்க்க மாசிலாமணியிடம் பணத்தை பெற்று கொண்ட கருப்பையா வரன் பார்க்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் மாசிலாமணி கருப்பையாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று மாலை மாசிலாமணி தனக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்க்கும்படி கேட்பதற்காக கருப்பையாவின் வீட்டிற்கு வந்துள்ளார். கருப்பையா வீட்டிற்கு அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருப்பதாக அழகம்மாள் மாசிலாமணியிடம் தெரிவித்துள்ளார்.
எனவே மாசிலாமணி கருப்பையாவை சந்திக்க அவரது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பையா “50 வயதுக்கு மேல இவனுக்கு கல்யாணம் கேக்குது” என மாசிலாமணியின் வயதை காரணமாக வைத்து யாரும் பெண் கொடுக்க வில்லை என்று கூறி மாசிலாமணியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் வீட்டின் அருகே உள்ள வயல் காட்டு பகுதியில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மாசிலாமணி அருகில் கிடந்த கட்டையை எடுத்து முதியவர் கருப்பையாவின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டார். முதலில் மரத்தில் இருந்து கீழே விழுந்து கருப்பையா இறந்து விட்டதாக நினைத்த குடும்பத்தினர் அவரது இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பின்னர் கருப்பையாவின் மகன் அவரது தந்தை உடலில் இருந்த காயங்களை பார்த்து அதிர்ச்சியடைந்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவுகள் கருப்பையா கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனை அறிந்த மாசிலாமணி (ஆக 06 ) ஆம் தேதி அன்று திருவாடானை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கருப்பையாவின் கொலை பற்றி மாசிலாமணி இடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மலை நேரத்தில் வயலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.