சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் 22 வயதுடைய அருண் விஜய். இவருக்கு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. பின்னர் அடிக்கடி சிறுமி அருண் விஜய் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் பலமுறை அருண் விஜய் அவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டிற்கு வரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மிகுந்த சோர்வுடன் இருந்த மாணவி திடீரென்று மயக்கம் அடைந்து விழுந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.
அங்கு மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்த நிலையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் அருண் விஜய்யுடன் பழகி வந்தது தெரியவந்தது. எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அருண் விஜய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்.
மேலும் மாணவிக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழக்கங்குவதை உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்தில் அருண் விஜய்யின் பெற்றோருக்கு எதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதலால் 14 வயது சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.