

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி விஜயகுமார் என்ற மகன் உள்ளார். தங்கவேல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்றுள்ளார். எனவே அவருக்கு ஓய்வு பெற்ற தொகை மற்றும் பென்ஷன் தொகை வந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த பணத்தை தங்கவேல் தனது கடைசி காலத்திற்கு பிறகு மகனுக்கு கொடுப்போம் அதுவரை பாதுகாப்பாக இருக்கட்டும் என தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்துள்ளார். இதனிடையே அவர்களது மகன் விஜயகுமார் தந்தை தங்கவேலுவின் பென்ஷன் பணத்தை கேட்டு அடிக்கடி தாய் மற்றும் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதே போல கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பென்ஷன் பணத்தை கேட்டு மகன் விஜயகுமார் தந்தை தங்கவேலுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கோபமடைந்த தந்தை விஜயகுமாரை கடுமையாக திட்டி அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் தங்கவேலுவை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். பின்னர் தனது கணவனின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த பத்மாவதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தங்கவேலுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கவேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்த தேவூர் போலீசார் முன்னதாக அடிதடி தகராறு என்று வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தப்பியோடிய மகன் விஜயகுமாரை தனிப்படை அமைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மகனே தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து மகன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.