“பழிக்குப்பழியாக கொலை செய்யாமல் விடமாட்டேன்” - மூன்று வருடமாக நடந்த அடிதடி வழக்கு.. அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள்!

இதனையறிந்த கோகுல் குமார், கணேஷ் பாண்டி தன்னை பழிக்குப்பழியாக கொலை செய்வதற்குள் முந்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில்
Sivakasi Murder News
Sivakasi Murder News
Published on
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மேற்கு பகுதியில் உள்ள நேருஜி நகரைச் சேர்ந்தவர் கோகுல் குமார். இவருக்கும் ஈஸ்வர பாண்டி என்பவருக்கும் தனியார் மதுபான கடையில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த தகராறு குடும்ப பிரச்சனையாக மாறி அடிதடி வரை சென்ற நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் இது சம்பந்தமாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவகாசி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த கோகுல் குமாரும், அவரது கூட்டாளிகளான நேருஜி நகர் கார்த்திக், காந்தி நகர் ஜீவா, ராஜேஷ் மற்றும் சிலோன் காலனி கணேஷ் பாண்டி ஆகிய ஐவரும் சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த 2023 ஆம் ஆண்டு ஈஸ்வரபாண்டியை கொலை செய்தனர். கொலை குறித்து ஈஸ்வர பாண்டியனின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஈஸ்வர பாண்டியின் தம்பியான 20 வயதுடைய கணேஷ் பாண்டி “அண்ணனை கொலை செய்தவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்யாமல் விடமாட்டேன்” என சபதம் எடுத்து அன்றாடம் குடிபோதையில் ஆத்திரத்தோடு நேருஜி நகர் பகுதியில் பலரிடமும் கூறி வந்ததாக தெரிகிறது. இதனையறிந்த கோகுல் குமார், கணேஷ் பாண்டி தன்னை பழிக்குப்பழியாக கொலை செய்வதற்குள் முந்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் நேற்றிரவு குடிபோதையில் இருந்த கணேஷ் பாண்டியை தனது கூட்டாளிகளுடன் நேருஜி நகரிலிருந்து விரட்டிச் சென்று வ.உ.சி நகர் பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேஷ் பாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்தின் பகுதிகளை காவல்துறை உயரதிகாரிகள் இரவோடு இரவாக நேரில் பார்வையிட்டு போலீஸ் மோப்ப நாய் மூலம் விசாரணை மேற்கொண்டனர். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் தப்பி யோடிய கோகுல் குமார் உள்ளிட்ட சிலரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இக்கொலை சம்பவம் சிவகாசி மேற்கு நேருஜி நகர், சிலோன் காலனி, காந்தி நகர் போன்ற பகுதிகளின் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதட்டமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு மேலும் எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக இரவு முழுவதும் தொடர்ந்து போலீசார்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com