
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள வலியனேரி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இருக்கு 50 வயதில் பாலன் என்ற மகனும், 46 வயதில் ராஜ்குமார் என்ற மகனும் இருந்த நிலையில் பொன்னுசாமி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார், திருமணத்திற்கு பிறகு இருவரும் அவர்களது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தனி தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். பாலன் மற்றும் ராஜ்குமாரின் வீடுகள் அருகருகே இருந்ததால் குடிப்பழக்கம் உள்ள இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
பாலனும் ராஜ்குமாரும் மதுபோதையில் அடிக்கடி சண்டை போடுவது. பின்னர் போதை தெளிந்த பிறகு சாதாரணமாக நடந்து கொள்வதும் இவர்களது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பாலன் மற்றும் ராஜ்குமார் இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து வழக்கம் போல அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். பின்னர் குடிபோதையில் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வழக்கம் போல நடக்கிறது என நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் வாய் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது வீட்டிற்கு சென்ற பாலன் இரவு உணவு அருந்திவிட்டு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது பாலன் வீட்டிற்கு சென்ற ராஜ்குமார், பாலனின் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெளியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த தனது அண்ணனை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாலனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாங்குநேரி போலீசார் உயிரிழந்த பாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் கொலை செய்த பாலனின் தம்பியான ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் உடன் பிறந்த சகோதரரை தம்பி வெட்டிக் கொன்ற சம்பவம் நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.