
வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி 55 வயதான மைத்ரா தேவி இவர்களுக்கு இரண்டு மகள் இரண்டு மகன் என நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு ஜெகதீசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தேவியின் இரண்டு மகள்களில் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டு தனது கணவன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத தேவி மகளிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் தேவியின் மூத்த மகனான 30 வயதான கார்த்திக் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். எனவே ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த கார்த்திக் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். வழக்கம் போல் குடித்து விட்டு கடந்த 14ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு சென்றபோது கடந்த ஆண்டு இறந்து போன தந்தையின் நினைவு நாள் வருகிறது தந்தையின் புகைப்படத்தை ஏன் இங்கு வைக்கவில்லை என கேட்டு சுவரில் இருந்த ஜெகதீசனின் படத்தை ஹாலில் எடுத்து வந்து வைத்துள்ளார்.
அதேபோன்று காதல் திருமணம் செய்து கொண்ட தனது அக்காவை நினைவு நாள் அன்று வீட்டிற்கு வர வைக்க வேண்டும் என கேட்டு கார்த்திக் தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகளை வீட்டுக்கு அழைக்க தேவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் வீட்டிலிருந்து கத்தியால் தனது தாயின் கழுத்தை அறுத்துள்ளார். இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த தேவி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதைக் கண்ட கார்த்திக் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தேவி வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் தேவி ரத்தவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தனது தாயை குடிபோதையில் கொலை செய்த கார்த்திகை காட்டுப்புத்தூரில் வைத்து கைது செய்துள்ளனர்.
கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். குடிபோதையில் மகனே தாயை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்