'சிறுமியின் பிறப்புறுப்பில் மழுங்கியப் பொருள்' - ஆனாலும் போக்ஸோ வழக்கு இல்லை.. உச்ச நீதிமன்றம் காட்டமான விமர்சனம்!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கை விசாரிப்பதில் காவல்துறையின் “உணர்ச்சியற்ற அணுகுமுறையை” காரணம் என்று உச்சநீதி மன்றம் விமர்சனம்.
'சிறுமியின் பிறப்புறுப்பில் மழுங்கியப் பொருள்' - ஆனாலும் போக்ஸோ வழக்கு இல்லை..
உச்ச நீதிமன்றம் காட்டமான விமர்சனம்!
Published on
Updated on
2 min read

நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில், காசியாபாத் காவல்துறையின் “உணர்ச்சியற்ற அணுகுமுறையை” காரணம் என்று, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று கடுமையாக விமர்சித்ததுடன், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை அனைத்து வழக்கு ஆவணங்களுடன், ஏப்ரல் 13 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில், ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அல்லது ஒரு மத்திய முகமையின் மூலம், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் காலவரையறைக்குட்பட்ட விசாரணை தேவைப்படலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, தினக்கூலித் தொழிலாளியான பாதிக்கப்பட்டவரின் தந்தைக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் என். ஹரிஹரன் முன்வைத்த வாதங்களைக் கவனத்தில் கொண்டு, மாநில காவல்துறை இதுவரை விசாரணையைக் கையாண்ட விதம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. "காணொளி ஆதாரத்தைப் பார்த்த கணமே என் மனசாட்சி கிளர்ந்தது," என்று ஹரிஹரன், நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்ததோடு, இந்த வழக்கில் நீதித்துறை தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், "இந்தக் குற்றத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் அம்சம் என்னவென்றால், இது இரண்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் காவல்துறையின் முழுமையான அலட்சியத்தையும், உணர்வற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது," என்று தலைமை நீதிபதி கூறினார்.

சம்பவம் நடந்த மறுநாள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்தன. மேலும், குழந்தையின் பிறப்புறுப்பில் 'மழுங்கிய பொருள் ஒன்று இருந்தது' என்று பிரேத பரிசோதனை அறிக்கை இதைக் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம், ஒவ்வொரு நாளும் வழக்கை வாபஸ் பெறுமாறு கூறப்படுவதாகவும், அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு, மனுதாரர் மீதோ அல்லது வழக்கில் உள்ள சாட்சிகள் மீதோ "எந்தவொரு நிர்ப்பந்த நடவடிக்கையும்" எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, காசியாபாத் அதிகாரிகள், தங்கள் தரப்பு வாதத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், "நீங்கள் எல்லா தில்லுமுல்லுகளையும் செய்துவிட்டுப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறீர்கள்" என்று, தலைமை நீதிபதி கூறினார். "மத்திய அமைப்பின் தலைமையில், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் காலவரையறைக்குட்பட்ட ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தேவைப்படுகிறது. ஒரு நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படட்டும். காசியாபாத் காவல் ஆணையரும், நந்தகிராம் காவல் நிலைய ஆய்வாளரும் ஆஜராக வேண்டும். பாதிக்கப்பட்டவரை அனுமதிக்க மறுத்த தனியார் மருத்துவமனைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது," என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அடையாளங்கள் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"காவல்துறையினர் இதை ஒரு கொலையாக மட்டுமே விசாரிக்க விரும்பினர். இந்த வழக்கு அவர்களிடம் வந்தபோது குழந்தை இறந்துவிட்டதாக காவல் துறை அறிக்கை கூறுகிறது. ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததைக் காட்டும் காணொளிப் பதிவு ஒன்று உள்ளது. தயவுசெய்து அந்தக் காணொளியைப் பாருங்கள்," என்று ஹரிஹரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கில் வெளிப்படையாக பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்டிருந்தபோதிலும், முதல் தகவல் அறிக்கையில், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் சேர்க்கப்படவில்லை என்பதை நீதிபதி அமர்வு குறிப்பிட்டது. மார்ச் 16 அன்று, பாதிக்கப்பட்ட சிறுமியை அண்டை வீட்டுக்காரர் ஒருவர் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. குழந்தை திரும்பி வராததால், சிறுமியின் தந்தை தேடிச் சென்றபோது, ​​அச்சிறுமி சுயநினைவின்றி இரத்தத்தில் வெள்ளத்தில் கிடப்பதை கண்டுள்ளார். இதையடுத்து, காசியாபாத்தில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகள், ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தையை அனுமதிக்க மறுத்ததும், இறுதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் அக்குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதும் குறித்து நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com