

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் அருகே உள்ள பல்லவராயன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தர்மர். இவர் அதே பகுதியில் கூலி தொழில் செய்து வந்த நிலையில் இவரது மனைவி சந்திரா வீட்டிற்கு அருகில் கூழ் கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களது மகனான 26 வயதுடைய அஜித்தும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியதால் சிறு வயதில் இருந்தே கூலி தொழில் செய்து வந்தார். மது அருந்தும் பழக்கமுடைய தர்மர் அவ்வப்போது மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
சமீப காலத்தில் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக மாறிய தர்மர் தின்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மகனுடன் தேவையற்ற தகராறு செய்து வந்திருக்கிறார். வழக்கம் போல நேற்றைய தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த தர்மர் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்திருக்கிறார். மேலும் “அம்மாவை போய் இவ்வளவு அசிங்கமா பேசுற” என மகன் கேட்டதற்கு அவரிடமும் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இதில் ஆத்திரமடைந்த தர்மரின் மனைவி சந்திரா மற்றும் மகன் அஜித் ஆகியோர் அருகில் கிடந்த கட்டைகளை எடுத்து தர்மரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தர்மர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த தர்மர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தர்மரின் மனைவியான சந்திரா மற்றும் மகன் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக்கின்றனர். குடித்துவிட்டு தகராறு செய்த தந்தையை தாயுடன் சேர்ந்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.