
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ். இவர் திருநின்றவூரின் விசிக நகர செயலாளராக இருந்து வந்துள்ளார். இவரும் 26 வது வார்டு விசிக கவுன்சிலர் கோமதி என்பவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கோமதி ஸ்டீபன் ராஜ் தம்பதிக்கு தற்போது நான்கு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோமதிக்கு அதேபகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பானது காலப்போக்கில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோமதி நேற்று இரவு ஜெயராம் நகர் நடுக்குத்தகை பகுதியில் அவரது ஆண் நண்பருடன் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த ஸ்டீபன் ராஜ் நண்பர் ஒருவர் ஸ்டீபன் ராஜ்க்கு தகவல் அளித்துள்ளார்.
இதனை அறிந்து நடுக்குத்தகை பகுதிக்கு வண்டியில் சென்ற ஸ்டீபன் ராஜ் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த ஆண் நண்பர் தப்பி சென்றுள்ளார். மனைவியின் மீது ஆத்திரம் அடைந்த ஸ்டீபன் ராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதற்கிடையே ஸ்டீபன் ராஜ் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஸ்டீபன் ராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
ஆண் நண்பருடன் உறவில் இருந்த மனைவியை கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய் உயிரிழந்து தந்தை சிறைக்கு சென்ற நிலையில் அவரது 4 மகன்களும் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.