

ஜெயங்கொண்டம் அருகே பிரியாணி வாங்கியதில் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவன். மனைவியை கொலை செய்து மறைத்து இடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி ரமேஷை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த செங்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). விவசாயக் கூலி தொழிலாளி இவருக்கு சுமதி என்கின்ற மனைவியும், நான்கு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமதியின் உறவினர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரைப் பார்த்து நலம் விசாரிக்க சுமதி 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி ரமேஷிடம் கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து 15-ம்தேதி ரமேஷ், சுமதி மற்றும் அவரது தந்தை வடிவேல் ஆகிய மூவரும் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அரியலூர் மருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வி. கைகாட்டி பகுதி அருகே வந்தபோது ரமேஷ் மதிய உணவுக்காக அங்குள்ள ஹோட்டலில் பிரியாணி வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சுமதி “பிரியாணி எவ்வளவுக்கு வாங்கினாய்” என்று கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் “750 ரூபாய்க்கு வாங்கினேன்” என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி சுமதி “நானே 2000 கடன் வாங்கி வந்துள்ளேன் என்றும், அதிக விலைக்கு பிரியாணி வாங்கி சாப்பிட வேண்டியது அவசியம் என்ன?” என்றும் சண்டை போட்டுள்ளார்.
இதற்தையடுத்து சண்டையானது கணவன், மனைவி இருவருக்கும் இடையே தீவிரமடைந்துள்ளது. அப்போது அங்கிருந்த சுமதியின் தந்தை வடிவேல், சமரசம் செய்து வைத்து பின்னர் அவரது சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். இதனிடையே 16-ம் (நேற்று) தேதி இன்று காலை மீண்டும் பிரியாணி குறித்த சண்டை எழுந்துள்ளது. அப்போது சுமதி ரமேஷை குச்சியால் தாக்கியுள்ளார். சண்டை முடிவுக்கு வரதநிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கணவர் ரமேஷ் அருகில் இருந்த சவுக்கு மரக்கட்டையை எடுத்து சரமாரியாக சுமதியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுமதியின் கொலையை மறைத்து ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமதியின் உடலில் ஏற்பட்ட காயங்களை மஞ்சளால் பூசி மறைத்துள்ளனர். பின்னர் உடனடியாக உடலை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமதியின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வடிவேல் விக்ரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் உடனடியாக சென்ற விக்ரமங்கலம் போலீசார் அங்கு சுமதியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ரமேஷிடம் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சுமதிக்கு நான்கு பெண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.