

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் என்பவரின் மகன் 60 வயதுடைய கிருஷ்ணன். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேன் பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெரியம்மாள் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் நீண்ட நாட்களாகியும் குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அஞ்சலிக்கும் குழந்தைகள் பிறக்காத நிலையில் கிருஷ்ணன் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றதாக சொல்லப்படுகிறது. எனவே எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த கிருஷ்ணன் நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருந்த மனைவிகளிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் பெரும்பாலும் முதல் மனைவி “ரிட்டையராகி ஏன் இப்படி உயிர வாங்குற” என கேட்டு திட்டியதாக சொல்லப்படுகிறது எனவே கிருஷ்ணனுக்கு அவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் பெரியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே பெரியம்மாளை கீழே தள்ளிவிட்டு உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணனின் இரண்டாவது மனைவி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்த நிலையில் பெரியம்மாள் ஏற்கனவே உயிரிழந்ததை அறிந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைவாசல் போலீசார் பெரியம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கணவர் கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் அடித்த தள்ளியதில் கீழே விழுந்த மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.