
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணகி இவருக்கு அன்பழகன், அறிவழகன், மதியழகன் என்ற மூன்று மகன்கள் இருக்கும் நிலையில் அறிவழகன் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அன்பழகன் அதே பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார்.
கண்ணகிக்கு சுசீலா என்ற தங்கை (55) உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுசீலாவின் கணவர் உயிரிழந்துள்ளார். எனவே கண்ணகி தனது தங்கையான சுசீலாவிற்கு பண உதவி செய்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து அறிவழகன் சம்பாரித்து அனுப்பும் பணத்தை கண்ணகி மொத்தமாக சுசீலாவிற்கு கொடுத்ததாகவும் கண்ணகியின் பெயரில் இருந்த நிலத்தை சுசீலா பெயருக்கு மாற்றி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
தம்பி கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் பணத்தை தாய் இப்படி செலவழிக்கிறாரே என்ற ஆத்திரத்தில் அன்பழகன் இருந்துவந்துள்ளார். இதனால் அன்பழகனுக்கும் கண்ணகிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அன்பழகன் தனது அம்மாவின் நிலத்தை மீண்டும் தன்னிடம் கொடுக்க சொல்லி சுசீலாவிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சுசீலா அன்பழகனின் நடத்தை குறித்து கண்ணகியிடம் தவறாக கூறியுள்ளார். ஏற்கனவே சொத்து பிரச்சனையில் சுசிலா மீது கோபத்தில் இருந்த அன்பழகன் இந்த செயலால் சுசீலா மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
எனவே சுசீலாவை கொலை செய்யும் எண்ணத்தில் நேற்று காலை உறவினரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்று வந்து கொண்டிருந்த சுசீலாவை அன்பழகன் நடுரோட்டில் வைத்து கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதை பார்த்து தடுக்க வந்த பொது மக்களையும் “யாராவது தடுக்க வந்த உங்களையும் குத்திட்டு போயிட்டே இருப்பேன்” என கூறி மிரட்டியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுசீலாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் சுசீலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற அன்பழகனை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.