நகம் உடையும்... தலைமுடி கொட்டும்... ஐஸ் கட்டியைக் கடிக்கத் தோன்றும்! "இத்தனை நாளா நமக்குத் தெரியாமப் போன 'அயர்ன்' பற்றாக்குறை"

இரும்புச்சத்து குறைபாட்டின் முதல் மற்றும் மிக முக்கியமான அறிகுறி, எவ்வித ஓய்வு எடுத்தாலும் குணமாகாத தொடர் சோர்வு (Persistent fatigue) ஆகும்.
Iron Deficiency
Iron DeficiencyIron Deficiency
Published on
Updated on
3 min read

இன்றைய அவசர உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறையை விட, அன்றாட வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், உடலில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்களை வேலைப்பளு, தூக்கமின்மை அல்லது சாதாரண ஸ்ட்ரெஸ் என்று நினைத்து எளிதாகக் கடந்து விடுகிறார்கள். உலகளவில் மனிதர்களைத் தாக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் இரும்புச்சத்து பற்றாக்குறை என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. நமது உடலில் ரத்தச் சிவப்பணுக்கள் உருவாவதற்கும், அவை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும் இந்த இரும்புச்சத்துதான் மிக முக்கிய எரிபொருளாகும். ஆனால், இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் மிகவும் லேசானதாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் இதனை முழுமையாக அலட்சியப்படுத்துகிறார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இது தொடர்பாக அஸ்டர் ஆர்வி மருத்துவமனையின் முதன்மைப் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் அரவிந்தா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் சாதாரணமாக நினைத்து ஒதுக்கும் 9 முக்கியமான ஆரம்பக்கட்ட அறிகுறிகளை விரிவாக விளக்கியுள்ளார்.

இரும்புச்சத்து குறைபாட்டின் முதல் மற்றும் மிக முக்கியமான அறிகுறி, எவ்வித ஓய்வு எடுத்தாலும் குணமாகாத தொடர் சோர்வு (Persistent fatigue) ஆகும். நாம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும், காலையிலேயே உடல் எவ்வித ஆற்றலும் இன்றி டயர்டாக இருப்பது போல் உணர்ந்தால், அதற்கு உடலில் அயர்ன் லெவல் குறைவாக இருப்பதுதான் காரணமாகும். இரும்புச்சத்து குறையும் போது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து, மூளை மற்றும் தசைகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு பாதியாகக் குறைந்து விடுகிறது. இதனால் உடல் எப்போதும் ஒருவிதமான தளர்ச்சியுடனும், கடுமையான சோர்வுடனும் இருக்கும். இதனை வெறும் வேலைப்பளு என்று நினைத்து மாத்திரைகளைச் சாப்பிடுவது மிகப்பெரிய தவறு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டாவதாக, அடிக்கடி ஏற்படும் தலைவலி மற்றும் மயக்கம் இரும்புச்சத்து குறைபாட்டின் மிக முக்கியமான எச்சரிக்கை மணியாகும். நமது நரம்பு மண்டலத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் ரத்தத்தின் மூலம் சரியாகக் கிடைக்காத போது, மூளையில் உள்ள ரத்த நாளங்கள் லேசாக வீக்கமடையத் தொடங்குகின்றன. இதன் காரணமாக, எந்தவொரு காரணமும் இன்றி அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படும். குறிப்பாக, நாற்காலியில் இருந்தோ அல்லது படுக்கையில் இருந்தோ சட்டென்று எழுந்து நேராக நிற்கும் போது, தலை சுற்றுவது போன்றோ அல்லது பேலன்ஸ் இழந்து நிலைதடுமாறுவது போன்றோ உணர்ந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மூன்றாவது அறிகுறி, முகம் மற்றும் உடலின் சில பகுதிகள் வெளிறிப் போவதாகும். நமது ரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தைத் தருவதே ஹீமோகுளோபின் தான். உடலில் இரும்புச்சத்து குறையும் போது ரத்தம் தனது அடர்ந்த சிவப்பு நிறத்தை இழந்து வெளிறிய நிறத்திற்கு மாறுகிறது. இதன் தாக்கம் நமது சருமத்தில் தெளிவாகத் தெரியும். குறிப்பாக, கண்ணாடியில் உங்களின் கீழ் இமைகளை லேசாக இழுத்துப் பார்க்கும் போது, உள்பகுதி அடர்ந்த சிவப்பு நிறத்தில் இல்லாமல் வெளிறிய பிங்க் அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தால், உங்களுக்கு ரத்த சோகை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். இது தவிர உதடுகள், ஈறுகள் மற்றும் நகக் கண்களும் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துக் காணப்படும்.

நான்காவதாக, மிகச் சாதாரணமான வேலைகளைச் செய்யும் போது கூட ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகும். நீங்கள் சாதாரணமாக வீட்டின் படிக்கட்டுகளில் ஏறும் போதோ அல்லது கொஞ்ச தூரம் நடக்கும் போதோ வழக்கத்திற்கு மாறாக அசுர வேகத்தில் மூச்சு வாங்கினால், அது ஆபத்தின் அறிகுறியாகும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் போது, உடல் உறுப்புகளைக் காப்பாற்ற நமது இதயமும் நுரையீரலும் பலமடங்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உடலுக்கு அதிக ஆக்ஸிஜனை இழுப்பதற்காக சுவாசிக்கும் வேகம் தன்னிச்சையாகவே அதிகரித்து, மூச்சுத்திணறலை உண்டாக்குகிறது.

ஐந்தாவது அறிகுறி, வெயில் காலத்திலும் கூட கைகள் மற்றும் கால்கள் எப்போதும் ஜில்லென்று ஐஸ் போலக் குளிர்ந்து போயிருப்பதுதான். உடலில் இரும்புச்சத்தும் ரத்த ஓட்டமும் குறைவாக இருக்கும் போது, நமது மூளையானது இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற உடலின் மிக முக்கியமான உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை கொடுக்கும். இதனால், கை மற்றும் கால் போன்ற வெளி உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவை உடல் குறைத்துக் கொள்கிறது. இதன் காரணமாகவே, சுற்றுப்புறச் சூழல் சாதாரணமாக இருந்தாலும், சிலருக்கு உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் எப்போதும் ஐஸ் கட்டி போலக் குளிர்ந்தே இருக்கும்.

ஆறாவதாக, மிகக் கடுமையான தலைமுடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போதல் ஆகும். ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்குத் தலைமுடியின் வேர்க்கால்களுக்குத் தடையற்ற ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துக்களும் தேவை. உடலில் இரும்புச்சத்து குறையும் போது, வேர்க்கால்கள் பலவீனமடைந்து முடி கொட்டத் தொடங்கும். நீங்கள் நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிட்டும், எவ்வித ஹார்மோன் குறைபாடுகளும் இல்லாத நிலையிலும் தொடர்ந்து தலைமுடி கொட்டிக்கொண்டே இருந்தால், உடனே உங்களின் ஃபெரிடின் (Ferritin) எனப்படும் இரும்புச்சத்து சேமிப்பு அளவைச் செக் செய்ய வேண்டியது அவசியமாகும்.

ஏழாவது அறிகுறி, நகங்கள் எளிதில் உடைந்து போவது அல்லது கரண்டி வடிவில் மாறுவதாகும். நகங்களின் உறுதித்தன்மைக்குக் காரணமான கெரட்டின் (Keratin) உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். அயர்ன் லெவல் குறையும் போது நகங்கள் தங்களின் இயற்கையான வடிவத்தை இழந்து, மிகவும் மெலிதாகி, லேசான அழுத்தம் கொடுத்தால் கூட எளிதில் உடைந்து போகும். சிலருக்கு நகங்களின் நடுப்பகுதி உள்நோக்கி அமுங்கி, ஓரங்கள் மேலே தூக்கிக் கொண்டு, பார்ப்பதற்கு ஒரு சிறிய ஸ்பூன் வடிவில் மாறும். இந்த நிலையை மருத்துவ உலகில் கொய்லோனிச்சியா என்று அழைக்கிறார்கள்.

எட்டாவதாக, ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போவதும், அடிக்கடி ஏற்படும் கோபமும் ஆகும். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது, அது நமது ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். இதனால் எந்தவொரு வேலையிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் போகும், அடிக்கடி விஷயங்களை மறந்துவிடும் 'பிரைன் ஃபாக்' நிலை ஏற்படும். காரணமே இல்லாமல் சட்டென்று கோபம் வருவது, எரிச்சலடைவது மற்றும் அடிக்கடி மூட் அவுட் ஆவது போன்ற மனநல மாற்றங்கள் கூட இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒன்பதாவது மற்றும் மிக விசித்திரமான அறிகுறி என்னவென்றால், சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களைச் சாப்பிடத் தோன்றும் விசித்திரமான ஆசைதான். மருத்துவ உலகில் இதனை 'பிகா' (Pica) என்று அழைக்கிறார்கள். உடலில் இரும்புச்சத்து மிக மோசமாகக் குறையும் போது, மூளையின் கெமிஸ்ட்ரி மற்றும் டோபமைன் (Dopamine) பாதைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், சிலருக்குத் நாள் முழுவதும் ஐஸ் கட்டிகளை மென்று சாப்பிட வேண்டும் என்ற கடுமையான அநாவசிய ஆசை தூண்டப்படும். இன்னும் சிலருக்கு மண், சாம்பல், சாக் பீஸ் அல்லது பச்சரிசியை ரகசியமாக எடுத்துச் சாப்பிடத் தோன்றும். இத்தகைய விசித்திரமான ஆசைகள் உங்கள் உடலுக்குள் இருக்கும் மாபெரும் ஊட்டச்சத்து குறைபாட்டின் வெளிப்படையான எச்சரிக்கையாகும்.

உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறதா என்பதை வெறும் அறிகுறிகளை வைத்து மட்டுமே முழுமையாக முடிவு செய்துவிட முடியாது; இதற்குக் கம்ப்ளீட் பிளட் கவுண்ட் (CBC) மற்றும் சீரம் ஃபெரிடின் போன்ற ரத்தப் பரிசோதனைகளைச் செய்வது மிகவும் கட்டாயமாகும். பெண்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராமுக்கு கீழேயும், ஆண்களுக்கு 13 கிராமுக்கு கீழேயும் இருந்தால் அது ரத்த சோகையைக் குறிக்கும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால், நீங்களாகவே கடைகளில் விற்கும் அயர்ன் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது; ஏனெனில், உடலில் இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கூடினாலும் அது கல்லீரலைப் பாதிக்கும் ஆபத்து உண்டு. எனவே, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில், உணவில் கீரைகள், பேரீச்சம்பழம், மாதுளை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வதே இதற்கான முறையான தீர்வாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com