சர்க்கரையே சாப்பிடவில்லை... மருந்தும் எடுத்தும் ரத்தத்தில் சர்க்கரை ஏறியது ஏன்? வெளியான முக்கிய காரணங்கள்

உணவில் போதுமான புரதம் இல்லாமை, சிறியதாகத் தோன்றும் இடைவேளை உணவுகள் போன்ற அன்றாட பழக்கங்களும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டை
 blood sugar
Published on
Updated on
2 min read

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றால் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது மட்டும் போதுமா? “நான் இனிப்பே சாப்பிடுவதில்லை, உணவிலும் கவனமாக இருக்கிறேன், மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்கிறேன். இருந்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏன் திடீரென உயர்கிறது?” என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். இதற்கு உணவு மட்டுமே காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மன அழுத்தம், உணவு உட்கொள்ளும் நேரத்தில் ஏற்படும் இடைவெளி, உணவில் போதுமான புரதம் இல்லாமை, சிறியதாகத் தோன்றும் இடைவேளை உணவுகள் போன்ற அன்றாட பழக்கங்களும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர் ஷ்வேதா ஷா பகிர்ந்துள்ள ஒரு நோயாளி அனுபவம் சுட்டிக்காட்டுகிறது.

அவர் பகிர்ந்த சம்பவத்தில், நீரிழிவு கொண்ட ஒரு பெண் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது ரத்தச் சர்க்கரை அளவு தொடர்ந்து ஒரே நிலையில் இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருந்தது. அவர் இன்சுலின் மற்றும் Glycomet எனப்படும் மெட்ஃபார்மின் மருந்தையும் பயன்படுத்தி வந்த நிலையிலும் சர்க்கரை அளவை நிலைப்படுத்துவது சிரமமாக இருந்ததாக நிபுணர் தெரிவித்தார். இதனால் உணவில் சர்க்கரை இல்லாதது மட்டும் போதுமா என்ற கேள்வி எழுகிறது. நோயாளியின் அன்றாட வாழ்க்கை முறையை விரிவாக கவனித்தபோது, உணவைத் தாண்டிய சில காரணிகள் இதில் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.

அதில் முதன்மையான காரணியாக குறிப்பிடப்பட்டது அதிகப்படியான மன அழுத்தம். ஒருவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும்போது உடலில் cortisol மற்றும் adrenaline போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கலாம். இந்த ஹார்மோன் மாற்றங்கள் உடலின் இன்சுலின் செயல்பாட்டை பாதித்து, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்க வழிவகுக்கக்கூடும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடல் உடனடி ஆற்றல் தேவைப்படுவதாக கருதி சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஸை ரத்தத்தில் வெளியிடும். இதனால் உணவில் சர்க்கரை இல்லாவிட்டாலும் சில நேரங்களில் ரத்தச் சர்க்கரை உயர்வு ஏற்படலாம்.

அடுத்ததாக கவனிக்க வேண்டியத தேநீருடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம். சர்க்கரை சேர்க்காத தேநீர் குடிப்பது ஆரோக்கியமான தேர்வு என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அதனுடன் அடிக்கடி பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அது வேறு பிரச்சினையை உருவாக்கலாம். பெரும்பாலான பிஸ்கட்டுகளில் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். இவை உடலில் வேகமாக செரிமானமாகி ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக உயர்த்தக்கூடும். குறிப்பாக புரதம் அல்லது நார்ச்சத்து கொண்ட உணவுடன் சமநிலைப்படுத்தாமல் அடிக்கடி சிற்றுண்டியாக எடுத்துக்கொண்டால், சர்க்கரை அளவில் வேகமான ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.

உணவு சாப்பிடுவதில் அதிக இடைவெளி இருப்பதும் மற்றொரு காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, அதேபோல் மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் அதிக இடைவெளி விடுவது உடலின் ஆற்றல் சமநிலையை பாதிக்கக்கூடும். நீண்ட நேரம் உணவு கிடைக்காதபோது உடல் சேமித்து வைத்திருக்கும் குளுக்கோஸை பயன்படுத்தத் தொடங்கும். சிலருக்கு இதனால் சர்க்கரை குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அதன் பிறகு அதிக பசி காரணமாக ஒரே நேரத்தில் அதிக உணவை எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகலாம். அப்போது உணவுக்குப் பிறகு ரத்தச் சர்க்கரை வேகமாக உயர வாய்ப்புள்ளது.

மேலும், உணவில் புரதச்சத்து போதுமான அளவில் இல்லாததும் முக்கியமானதாக கூறப்பட்டுள்ளது. புரதம் உணவு செரிமானம் மற்றும் குளுக்கோஸ் உடலில் உறிஞ்சப்படும் வேகத்தை பாதிக்கிறது. உணவில் புரதம் குறைவாக இருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தால் சிலருக்கு உணவுக்குப் பிறகு சர்க்கரை அளவில் கூர்மையான உயர்வு ஏற்படலாம். எனவே ஒவ்வொரு உணவிலும் தனிநபரின் தேவைக்கேற்ப பருப்பு வகைகள், முட்டை, மீன், கோழி, பால் பொருட்கள் அல்லது பிற பொருத்தமான புரத உணவுகளை சேர்ப்பது குறித்து மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசிக்கலாம்.

இந்த சம்பவத்தில் சிறிய, தனிப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு அந்த நோயாளியின் ஆற்றல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், மருத்துவ கண்காணிப்பின் கீழ் இன்சுலின் தேவையும் படிப்படியாக குறைந்ததாகவும் நிபுணர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை அனைவருக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான தீர்வாக பார்க்க முடியாது. நீரிழிவு நோயின் தன்மை, மருந்துகள், வயது, உடல் எடை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடு உள்ளிட்ட பல அம்சங்களைப் பொறுத்தே சிகிச்சை மாறுபடும்.

இதிலிருந்து முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது, நீரிழிவு கட்டுப்பாடு என்பது “சர்க்கரை சாப்பிடுகிறோமா, இல்லையா?” என்ற ஒரே கேள்வியில் முடிவதில்லை என்பதுதான். என்ன சாப்பிடுகிறோம் என்பதுடன் எப்போது சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம், உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளதா, உடற்பயிற்சி எப்படி உள்ளது, தூக்கம் மற்றும் மன அழுத்தம் எப்படி இருக்கிறது என்பதும் முக்கியம். அதே நேரத்தில், மருத்துவர் பரிந்துரைத்த இன்சுலின் அல்லது நீரிழிவு மருந்துகளை தன்னிச்சையாக குறைப்பது அல்லது நிறுத்துவது ஆபத்தானது. ரத்தச் சர்க்கரை தொடர்ந்து அதிகமாகவோ, எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கமாகவோ இருந்தால், உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களுடன் மருத்துவ ஆலோசனையும் அவசியம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com