ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது மிக அழகான ஒரு தருணம். கருத்தரித்த ஆரம்ப நாட்களில், உடலின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் பல சிறிய மாற்றங்கள் உடலில் நிகழும். இவைதான் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகள். முதல் அறிகுறியாக மாதவிடாய் தள்ளிப் போவதைக் குறிப்பிடலாம். வழக்கமாக வர வேண்டிய நாளில் மாதவிடாய் வரவில்லை என்றால், அது கர்ப்பத்திற்கான முதல் அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும், மன அழுத்தம் அல்லது உடல்நலக் காரணங்களால் கூட மாதவிடாய் தள்ளிப் போகலாம். எனவே, வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கிட் (Pregnancy kit) மூலம் பரிசோதித்து உறுதி செய்வது நல்லது.
அடுத்ததாக, அதிகப்படியான சோர்வு. கர்ப்பத்தின் முதல் சில வாரங்களில், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு அதிகமாக சுரப்பதினால், உடல் மிகுந்த சோர்வை உணரும். நாள் முழுவதும் தூங்க வேண்டும் போல இருக்கும். மேலும், மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படும். அவை மென்மையாக அல்லது கனமாகத் தோன்றும். சிலருக்குச் சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்வார்கள். ஹார்மோன் மாற்றங்களால், உணவின் மணம் கூட சிலருக்குப் பிடிக்காது, குமட்டல் மற்றும் வாந்தி (Morning sickness) ஏற்படலாம். இது பெரும்பாலான பெண்களுக்குக் காலையில் ஏற்படும், ஆனால் சிலருக்கு நாள் முழுவதுமே இருக்கலாம்.
உடல் வெப்பநிலையில் மாற்றம், லேசான முதுகு வலி மற்றும் தலைவலி போன்றவை சில பெண்களுக்குத் தெரியும். ஈறுகளில் வீக்கம் அல்லது பசியின்மையில் மாற்றம் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ஒருவருக்குத் தெரிந்த அறிகுறி மற்றொருவருக்குத் தெரியாமல் போகலாம். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே கர்ப்பம் உறுதியாகலாம். இந்த அறிகுறிகள் தெரிந்ததும், உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை அல்லது ஸ்கேன் செய்து உறுதி செய்துகொள்வது நல்லது. கர்ப்பம் உறுதியானதும், உடனே போலிக் ஆசிட் (Folic acid) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் காலத்தில், பெண்கள் சத்தான உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான வேலைப்பளுவைத் தவிர்த்து, நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். மனதை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருப்பது தாய்க்கும் சேய்க்கும் மிக முக்கியம். உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். மருத்துவர் சொல்லும் பரிசோதனைகளை முறையாகச் செய்து வாருங்கள். தாய்மை என்பது ஒரு வரம்; அதை உடல் மற்றும் மனதோடு தயாராகி வரவேற்க வேண்டிய தருணம். ஏதேனும் கடுமையான வயிற்று வலி, ரத்தப்போக்கு அல்லது மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.