முதல்வர் நாற்காலிக்காக 2 வருடங்களாக நடக்கும் மோதல்.. டி.கே. சிவகுமாருக்கு சாதகமாக மாறுகிறதா காலம்?

2028 சட்டமன்றத் தேர்தலை வழிநடத்த டி.கே. சிவகுமாரை முதலமைச்சராக அமர வைப்பதுதான்
dk shivakumar
Published on
Updated on
2 min read

கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு இடையே முதலமைச்சர் பதவிக்காக நடக்கும் அதிகாரப் போட்டி, ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் குறையவில்லை. இந்த விவகாரத்தில் பிரியங்கா காந்தி நேரடியாகத் தலையிட்டு, தலைமை மாற்றத்தைக் கொண்டுவரத் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. செவ்வாய்க்கிழமை நடந்த நீண்ட நேரக் கூட்டங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மேலிடம் இதைப் வெறும் வதந்தி என்று மறுத்தாலும், திரைக்குப் பின்னால் பெரிய மாற்றங்களுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகிய இருவரையும் தனித்தனியாகவும், கூட்டாகவும் பல மணி நேரம் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கம், சித்தராமையாவை கண்ணியமாகப் பதவி விலகச் செய்து (ராஜ்யசபா எம்பி போன்ற பதவிகளை வழங்கி), 2028 சட்டமன்றத் தேர்தலை வழிநடத்த டி.கே. சிவகுமாரை முதலமைச்சராக அமர வைப்பதுதான். கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியைச் சமாளிக்க இந்த மாற்றம் அவசியம் என்பதை காங்கிரஸ் மேலிடம் உணர்ந்துள்ளது.

சித்தராமையா 80 வயதை நெருங்குவது மற்றும் அவரது நிர்வாகத் திறமை மீதுள்ள விமர்சனங்கள், அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளன. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் சமூகங்களின் ஆதரவு இவருக்கு இருப்பதால், இத்தனை காலம் இவரை மாற்ற காங்கிரஸ் அஞ்சியது. இந்த 'அஹிந்தா' ஆதரவுதான் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த பயம் நீங்கி, ஒரு மாற்றத்திற்கு நேரம் வந்துவிட்டதாகக் கட்சி கருதுகிறது.

டி.கே. சிவகுமாரின் கோரிக்கை மிகவும் வலுவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. துணை முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர் என இரண்டு முக்கியப் பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனித்து வருவது, கட்சிக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது. அவர் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை முதல்வராக்குவது அந்த சமூகத்தின் வாக்குகளைக் காங்கிரஸ் பக்கம் ஈர்க்க உதவும். இது மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரிய பின்னடைவாக அமையும். அதே சமயம், அவர் மீதுள்ள ஊழல் வழக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக அமையலாம் என்ற கவலையும் மேலிடத்திற்கு உள்ளது.

கடந்த நவம்பர் 2025-ல் ஆட்சி இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்தபோதே, பதவிப் பகிர்வு குறித்த சர்ச்சை வெடித்தது. அந்த நேரத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு தேர்தல் இருந்ததால், மேலிடம் சமாதானம் செய்து வைத்தது. இப்போது அந்தத் தேர்தல்கள் முடிந்துவிட்டதால், மீண்டும் தலைமை மாற்றப் பேச்சு சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்குத் தொடர்ச்சியாகப் படையெடுத்து வருவது, விரைவில் ஏதோ ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதையே உணர்த்துகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com