
இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலார் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக ஆளுநர் மாளிகையில் உள்ள வள்ளலார் பூங்காவில் மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என் ரவி அங்கு கூடி இருந்த பக்தர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடையே உரையாற்றிய போது “ நாட்டின் பல இடங்களில் சாதிய ஏற்றத்தாழ்வு உள்ளது இருப்பினும் அதிகம் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலும் சாதிய ஏற்றத்தாழ்வு உள்ளது என்பது வேதனை அளிக்கிறது. பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை பிடித்தாலும், சில அரசியல் கட்சிகள் பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பட்டியலின மக்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்.
நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என சுவர்களில் எழுதி இருப்பதை கவனிக்கிறேன். தமிழ்நாடு யாருடன் போராடும் இங்கு தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடுவதில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக இணைந்து வாழ வேண்டும்” என பேசியுள்ளார். இதில் ஆளுநர் தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று எழுப்பியுள்ள கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சரான மு. க ஸ்டாலின் தனது வலைதள பக்க பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.
அவரது வலைதள பக்கத்தில் "தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்… இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்! அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்! ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம்.
அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்! தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்! ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்! #Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்! ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்! நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்! இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!” என பதிவிட்டு தனது பதிலை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.