திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மே 15 அன்று தமிழக வெற்றிக் கழகத்தினை சேர்ந்த அமைச்சர் நிர்மல் குமார் (மின்சார துறை அமைச்சர்) சாமி தரிசனம் மேற்கொண்டார். அவர் கோவிலின் நடை சாத்தப்படும் நேரத்தில் தரிசனம் மேற்கொண்டதால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
சென்னையில் இருந்து மதுரை வந்த அமைச்சர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் பகுதியில் இருக்கக்கூடிய சுப்ரமணிய சாமி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருக்கிறார். மேலும் இவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் மதியம் ஒரு மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய சென்றியிருக்கிறார். இதனையடுத்து, கோவில் முன் காத்திருந்த அவரது தொண்டர்கள் அவரை வரவேற்றுள்ளனர். மேலும், கோவிலுக்கு சென்ற அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மூலஸ்தானத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளனர். கோயிலில் வழக்கமாக மதியம் 12.30 மணிக்கு உச்சி கால பூஜை தொடங்கும். இதையடுத்து 12.45 மணிக்கு கோயில் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள மண்டபத்தில் பெரிய கதவுகள் அடைக்கப்படும். திருவிழாக்காலங்களில் மட்டுமே இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலில் குறிப்பிட்ட நேரம் நெருங்கவும் பக்தர்கள் அனைவரும் படிப்படியாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கோவில் மூடப்படும் நேரத்திற்கு சென்ற அமைச்சர் நிர்மல் குமார், கருவறைக்குள் நுழைந்து தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள பக்தர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் அமைச்சர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மட்டும் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்தது அமைச்சருக்காக கோவிலின் ஆகம விதிகள் மீறப்பட்டனவா? என்ற சர்ச்சைகள் எழுப்பியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.