“குழந்தையை பிரிய மனமில்லாத தந்தை” - அதிகரித்த ஆன்லைன் கடன் பிரச்சனை.. சிதறிக்கிடந்த 6 வயது மகள் மற்றும் தந்தையின் உடல்!
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் வசித்து வருபவர் 38 வயதான லோகநாதன் இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ள நிலையில் லோகநாதன் காக்களூர் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார்.
லோகநாதன் ஆன்லைன் செயலிகளில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி அதை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். அதனால் செயலிகளில் இருந்து தொடர்ந்து போன் செய்து பணத்தை செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். எனவே தனது மனைவியின் 15 சவரனுக்கும்மேற்பட்ட நகைகளை அடகு வைத்து பணம் வாங்கி வந்துள்ளார்.
அந்த பணத்தை வைத்து கடனை கட்டாமல் ஆன்லைன் டிரேடிங்கும் ஆடம்பர செலவுகளையும் செய்து பணத்தை வீணடித்து உள்ளார். தொடர்ந்து ஆன்லைன் செயலிகளில் பணத்தை கேட்டு போன் செய்துள்ளார். பணத்தை எப்படி திருப்பி கட்டுவது என்று மன உளைச்சலில் இருந்த லோகநாதன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது 6 வயது பெண் குழந்தையை அழைத்து சென்ற லோகநாதன் புட்லூர் ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வீக்லி ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயில் முன் பாய்ந்ததில் இருவரது உடல்களும் சிதறிய நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து திருவள்ளூர் ரயில்வே காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், ஆறு வயது மகள் மற்றும் தந்தை லோகநாதனின் சிதறிய உடல் பாகங்களை சேகரித்து உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லோகநாதன் தனது மகள் மீது வைத்திருந்த அளவு கடந்த பாசத்தால், குழந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தையை தன்னுடன் அழைத்து சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்