

உத்திரமேரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் சென்று முதல்வர் படத்தை மாட்டி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக நிர்வாகிகள் - கைது செய்து நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து எந்த ஒரு முறையான நெறி முறைப்படி நடந்து கொள்வது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், தவெக வின் கட்சி நிர்வாகிகள் அரசு பொறுப்பில் இருப்பதாக நினைத்து கொண்டு பல்வேறு இடங்களில் அதிகாரம் போக்கினையும் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அந்த பகுதியை சார்ந்த தவெக நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் உடன் சென்று முதல்வர் விஜய் படத்தை காண்பித்து இவர் யாரென்று தெரிகிறதா? இவர் தான் முதல்வர் உங்களுக்கு மாமா எங்களுக்கு அண்ணன் என்று பேசியும், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
மேலும், எந்த ஒரு உள்ளாட்சி பொறுப்பிலும் இல்லாமல், தவெக துண்டை அணிந்து கொண்டு அரசு அதிகாரிகள் போல் பள்ளி மாணவர்கள் பயிலும் வகுப்பிற்கு சென்று அவர்களது கற்கும் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடம் முகச்சுழிப்பு ஏற்பட்டது. மேலும், முதல்வர் படங்கள் எல்லாம் தலைமையாசிரியர் அலுவலகத்தில் தான் இதுவரை மாட்டப்பட்டுள்ளது, எந்த ஒரு வகுப்பறைகளிலும் மாட்டியது இல்லை, இதுவரை இருந்த மரபை மாற்றி அமைத்து கல்வி பயிலும் மாணவர்களிடையே வெறுப்பு அரசியலை விதைக்கு வண்ணம் நடந்து கொண்டனர்.
இது குறித்து அறிந்த அந்த பகுதிகளை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகரன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். எந்த ஒரு பொறுப்பில் இல்லாத போது இந்த அளவுக்கு ரீலிஸ் எடுத்து அட்டுழியம் செய்கிறவர்கள் பொறுப்பிற்கு வந்தால் என்ன ஆகுமோ என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்