ஈரானியப் போர் எதிரொலி! வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு - சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு?

குறிப்பாக, ஹைதராபாத் மற்றும் பாட்னா போன்ற நகரங்களில் விலை மிக அதிகமாக உள்ளது...
Commercial LPG cylinder
Commercial LPG cylinder
Published on
Updated on
1 min read

ஜூன் 1 முதல் கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர் விலையை அரசு உயர்த்தியுள்ளதால், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்குப் புதிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 19 கிலோ எடையுள்ள ஒரு கமர்ஷியல் சிலிண்டரின் விலை 42 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 3,113.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் இந்த விலை உயர்வு இன்னும் அதிகமாக, 53.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, சிலிண்டரின் விலை 3,255.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையும் 11 ரூபாய் உயர்த்தப்பட்டு 821.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் டொமஸ்டிக் சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே கமர்ஷியல் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் 1,691.50 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரே அடியாக 993 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது வணிகர்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விலையேற்றம் டெல்லி, கொல்கத்தா மட்டுமல்லாமல் மும்பை, சென்னை, ஹைதராபாத் என நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக, ஹைதராபாத் மற்றும் பாட்னா போன்ற நகரங்களில் விலை மிக அதிகமாக உள்ளது.

இந்தத் திடீர் விலை உயர்விற்குப் பின்னால் சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் சவால்கள் முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் தொடர்புடைய போரினால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கு வளைகுடா நாடுகளைச் சார்ந்திருப்பதால், இந்த மோதல் விநியோகத்தில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே சிஎன்ஜி மற்றும் பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வணிக நிறுவனங்களுக்கு இது இரட்டைச் சுமையாக மாறியுள்ளது. இதனை எதிர்கொள்ள, பெட்ரோலிய அமைச்சகம் அரசு நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 30 நாட்களுக்குத் தேவையான எல்பிஜி இருப்பு வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், வருங்கால விநியோகத் தடைகளை எதிர்கொள்ளவும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உணவகங்கள் மற்றும் சிறு வணிகங்கள் இத்தகைய விலை உயர்வைத் தாங்க முடியாமல், விலை உயர்வுப் பலனை நுகர்வோர்களிடம் மாற்றும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com