கோவை கார் வெடி விபத்து சம்பவம்...! 3 - வது முறையாக சென்னையில் சோதனை...!

கோவை கார் வெடி விபத்து சம்பவம்...! 3 - வது முறையாக சென்னையில் சோதனை...!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரத்தில், சென்னையில் மூன்றாவது முறையாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

என்.ஐ.ஏ சோதனை :

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு : 

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகியவை வழங்கியதாக, ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையினால் வழக்குபதிவு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பி உள்ளது, அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது. 

முதல் சோதனை : 

இது தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில் சென்னை போலீசார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

இரண்டாம் சோதனை : 

இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி மீண்டும் சென்னை போலீசார் நான்கு இடங்களில் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் வெளி நாட்டு கரன்சி, 15 லட்சம் பணம், வங்கி கணக்கு புத்தகம், செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க், டைரி உள்ளிட்ட 38 பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்றாவது சோதனை : 

இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை ஓட்டேரி எஸ்.எஸ் புரத்தில் உள்ள சாகுல் ஹமீது, வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.எம். புஹாரி, ஏழு கிணறு வி.வி எம் தெருவில் உள்ள முகமது ஈசாக் கவுத், முத்தியால்பேட்டை பிடாரியார் கோயில் தெருவில் உள்ள உமர் முக்தார் ஆகியோருக்கு சொந்தமான 4 இடங்களில் சென்னை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வீட்டிலிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னனு பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் சோதனையில் தொடர்புடைய நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர் யாருடன் தொடர்பில் உள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com