அரசியலில் ஓபிஎஸ் -ன் எதிர்காலம் இனிமேல் ஜீரோ தான் - கத்தி கத்தி கூறிய ஜெயக்குமார்!!!

அரசியலில் ஓபிஎஸ் -ன்  எதிர்காலம் இனிமேல் ஜீரோ தான் - கத்தி கத்தி கூறிய ஜெயக்குமார்!!!

பொதுக்குழு செல்லும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டது. இதனையடுத்து இரு தரப்பும் சட்ட போரட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட ஓ.பன்னீர் செல்வம் இல்லையென தீர்ப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அனைத்து தொண்டர்களுக்கும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளித்திருக்கிறது கௌரவர்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஓபிஎஸ் அணிக்கு அதிமுக உடன் தொடர்பு இல்லை என உச்ச நீதிமன்றம் உறுதி படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ தான் என தெரிவித்தார். 

பாஜக தலையிடாது

ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லையென தெரிவித்தவர், அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என கூறினார். ஓபிஎஸ்க்கு ஆதரவாக மாவட்டங்களில் உள்ள கொஞ்ச தொண்டர்கள் எங்களிடம் வந்தால் அவர்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம் என தெரிவித்தார். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவது இல்லை எனக் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com