மலைகளின் மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 60 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியானது காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் புகழிடமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனசரகத்திற்குட்ப்பட்ட வனப்பகுதியில் வழக்கம் போல் வன பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மசினகுடி கோட்டம் துணை இயக்குநர், முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் மற்றும் கள இயக்குநருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களது ஆலோசனைப்படி பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானையின் இறப்பிற்கு என்ன காரணம் என்று பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.