"இனி நாங்களும் இந்திய ஆண்கள் டீமுக்கு சமம் தான்.. ஊதித் தள்ளிடுவோம்" - உலகக் கோப்பை வெற்றி குறித்து மிதாலி ராஜ்!

இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்
"இனி நாங்களும் இந்திய ஆண்கள் டீமுக்கு சமம் தான்.. ஊதித் தள்ளிடுவோம்" - உலகக் கோப்பை வெற்றி குறித்து மிதாலி ராஜ்!
Published on
Updated on
2 min read

இந்திய மகளிர் அணி, 2025 ஆம் ஆண்டின் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் இந்த நேரத்தில், இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான மிதாலி ராஜ், ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இந்த முறை கோப்பையைக் கைப்பற்றி, 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இழந்த கோப்பையின் சோகக் கதையை முடிவுக்குக் கொண்டு வந்தது. 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய மிதாலி ராஜ், இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்றபோது, மிகுந்த மகிழ்ச்சியில் கண்கலங்கினார். மும்பையில் நடந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரவு, முதல் முறையாக இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்தச் சாதனையை நிகழ்த்தியதில் ஸ்மிருதி மந்தானா, ஷஃபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா போன்ற வீரர்களுக்குப் பெரிய பங்கு இருந்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-க்கும் (BCCI), அதன் முன்னாள் செயலாளரான ஜெய ஷா அவர்களுக்கும் மிதாலி ராஜ் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். பிசிசிஐ மற்றும் அதன் நிர்வாகத்தின் ஆதரவுதான், இந்தியப் பெண்கள் அணிக்குத் தேவையான மரியாதையையும், ஆதரவையும் கொடுத்தது என்று அவர் பாராட்டினார். "பிசிசிஐ-யும், டபிள்யூ.பி.எல். தொடரும்தான் (WPL) இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் மிகப் பெரிய பங்கை வகித்துள்ளன. இதற்கு முன் நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளைக் காட்டிலும், இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை நடத்திய விதமும், அதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பும் மிக அதிகமாக இருந்தது" என்று மிதாலி ராஜ் குறிப்பிட்டார்.

இந்த மாற்றங்களுக்கான அடித்தளம் குறித்தும் பேசிய மிதாலி, "இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஆட்டத்தின்போது, முன்னாள் கிரிக்கெட் வீராங்கனைகள் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் முடிவை பிசிசிஐ-யின் செயலாளர் எடுத்ததுதான் மனதிற்கு மிகவும் நிறைவளித்தது. கடந்த காலத்தில் கடுமையான உழைப்பைக் கொடுத்தவர்கள்தான், இப்போதுள்ள இளம் தலைமுறை இந்தக் கட்டத்தில் நிற்பதற்கு விதைகளை ஊன்றியவர்கள் என்பதை இது சரியாக வலியுறுத்தியது. இது ஒரு மிகவும் அழகான செயல்" என்றும் புகழாரம் சூட்டினார்.

பிசிசிஐ-யில் இருந்தபோது, இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக ஜெய ஷா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்காகவும், குறிப்பாக மகளிர் முதன்மைத் தொடரை (Women's Premier League - WPL) அவர் ஆரம்பித்ததற்காகவும் மிதாலி ராஜ் நன்றி தெரிவித்தார். "முன்னாள் பிசிசிஐ செயலாளரும், இப்போதைய பன்னாட்டு கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான (ICC President) ஜெய ஷா தான் பெண்கள் விளையாட்டைக் கோலோச்சச் செய்து, அதில் முக்கிய முடிவுகளை எடுத்து, டபிள்யூ.பி.எல். தொடர் தொடங்கப்படுவதை உறுதி செய்தார். மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள இந்தத் தொடர், எண்ணற்ற வீராங்கனைகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. குறிப்பாக, அவர்களின் ஒட்டுமொத்த அணுகுமுறையே இப்போது மாறியுள்ளது" என்று மிதாலி உறுதியாகத் தெரிவித்தார்.

தனது பேச்சின் முடிவில், மிதாலி ராஜ் ஒரு முக்கியமான விஷயத்தை அழுத்தமாகக் கூறினார். பிசிசிஐ கொடுத்த இந்தத் தொடர்ச்சியான ஆதரவு, பெண்கள் கிரிக்கெட்டும், ஆண்கள் கிரிக்கெட்டுக்குச் சமமானது என்பதை நிரூபிக்கும் ஒரு முயற்சியாகும். இந்த முயற்சி இப்போது நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டது என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்தார். "நாங்கள் எப்போதும் தைரியமாக விளையாடுவது பற்றிப் பேசுகிறோம். ஆனால், அந்தத் துணிச்சல் என்பது, டபிள்யூ.பி.எல். போன்ற சவாலான அனுபவங்களைத் தொடர்ந்து கடந்து வருவதன் மூலம்தான் வளரும். இந்த உரிமையாளர் தொடர் (Franchise League) என்பது மிக அதிகமான அழுத்தம் நிறைந்த ஒரு வடிவமாகும். வீரர்கள் தொடர்ந்து இதுபோன்ற அழுத்தங்களுக்கு ஆளாகும்போது, அவர்கள் முதலில் அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு, பிறகு அதில் சிறந்து விளங்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்கள்."

மேலும், "உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய உலகளாவிய தொடரில் அதே அழுத்தங்களைச் சந்திக்கும்போது, அவர்கள் ஏற்கனவே அதற்காகத் தயாராகிவிடுகிறார்கள். இது நடக்கக் காரணமாக இருந்த பிசிசிஐ-க்கு மிகப்பெரிய பாராட்டுச் செல்ல வேண்டும். மேலும், உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையிலும் ஜெய் ஷா சமத்துவத்தை உறுதி செய்தார். இது ஒரு அற்புதமான விஷயம். இது பெண்கள் கிரிக்கெட், ஆண்கள் கிரிக்கெட்டுக்குச் சமமாக நிற்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது" என்று கூறி பெருமை பொங்க தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com