tvk vijay 
தமிழ்நாடு

“மேற்கு மண்டலத்தில் முந்தும் விஜய்..” பாஜக தலைமையிடம் செங்கோட்டையன் கொடுத்த ரிப்போர்ட்..! அதிமுக இனி அவ்வளவுதான்..!?

அதிமுக - பாஜக இருவரின் ஓட்டுக்களை விஜய் உடைக்கிறார் என...

மாலை முரசு செய்தி குழு

தமிழக  அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் கணிக்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள். 

இது இப்படி இருக்க, ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

சின்ன ரீவைண்ட்!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமானது என்பதை தமிழ்நாடு நன்கு அறிந்த ஒன்று. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது. 

இதற்கு இடையில் கடந்த செப் 15 -ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் எடுப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார். 

இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான்,  முத்துராமலிங்க தேவரின்  நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். இதுதான் சமயம் என நினைத்த எடப்பாடி, ‘கட்சிக்கு எதிரான செயலில் ஈடுபட்டார் செங்கோட்டையன் எனக்கூறி அவரை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்தும் நீக்கினார். இது எடப்பாடிக்கு பெரும் பின்னடைவு என்றே கருதப்பட்டது. 

இந்த சலசலப்புக்கு இடையில் தான், “அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான். 2026, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் நான் உள்பட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமெனகேட்டிருந்தோம். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களுடன் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் அந்த 18 பேரையும் அவர் கட்சியிலிருந்து நீக்கி, எம்எல்ஏ பதவியையும் பறித்தார்” என பரபரப்பான  கருத்தை கூறியிருந்தார். 

ஆனால் அதற்கு அதிமுக தலைமை எவ்வித பதில்வினையும ஆற்றாமலே இருந்து வந்தது. நாங்கள் அதிமுக உடன் கூட்டணியில் உள்ளோம் ஆனால், அவர்களின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என பேசிய பாஜக -வா இப்படி செய்தது என கேள்வி எழுப்பப்பட்டாலும், அவர்கள் தரப்பும் செங்கோட்டையனின் பேச்சுக்கு பேச்சுக்குக்கூட மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜயுடன் செங்கோட்டையன்! 

50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலிருந்த செங்கோட்டையனை எடப்பாடி அதிரடியாக நீக்கியிருந்தது, அவருக்கு பெரும் பின்னடைவுதான் என்கின்றனர் ஆர்வலர் பலர். இந்நிலையில் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் செங்கோட்டையன். ஆனால் இன்றும் அவர் சட்டைப்பையில் ஜெயலலிதா -வின் புகைப்படம் தான் இருந்தது. அந்த அளவுக்கு அதிமுக தலைமைக்கு பலகாலமாக விசுவாசமாக இருந்தவர் செங்கோட்டையன்.

ஆனால் இன்று அவர் தவெக -வில் இணைந்திருப்பது அரசியல் சூழலையே மாற்றியுள்ளது.  செங்கோட்டையன் வரவு குறித்து பேசியுள்ள விஜய் “20 வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பதவியை வகித்தவர் கட்சியின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கையாக இருந்தவர். 50 வருடங்களாக ஒரே இயக்கத்தில் பணியாற்றியவர் அண்ணன்  செங்கோட்டையன் அவரது அரசியல் அனுபவமும், களப்பயணனும் நமது தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக அமையும் இனி நல்லதே நடக்கும் நல்லது மட்டும் நடக்கும் வெற்றி நிச்சயம்” என கூறியுள்ளார்.  

செங்கோட்டையன் பேச்சு!

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் “அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவன், இந்த இயக்கம் தொடங்கும் போது அவருக்கு பின்னால் நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன். 1975 ஆம் ஆண்டு பொதுக் குழுவை சிறப்பாக நடத்தியத்திற்கு என்னை கட்டி தழுவி பாராட்டியவர் எம்ஜிஆர். எதிர்க்கட்சியினர் எங்கள் கட்சியை பார்த்து படம் போல நூறு நாட்களில்  மறைந்துவிடும் என தெரிவித்தனர். மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார் பத்தாயிரம்  மைல் தொலைவில் இருந்து வெற்றி பெற்று தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார். அவர் மறைந்த பிறகு இயக்கம் இரண்டாக உடைந்தும் அதில் புரட்சி தலைவி அம்மாவுடன் எனது பயணத்தை மேற்கொண்டேன். 

அம்மா அவரது சுற்று பயணங்களை மேற்கொள்ளும் போதும் சரி சில முக்கியமான ஆலோசனைகளை கேட்கும்போதும் சரி நான் அந்த பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். “இமயம் தலையில் விழும்போதும்  எனக்காகவும் இயக்கத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர்” என பாராட்டப் பெற்றவன். அப்போது இருந்த காலம் இப்போது இல்லை எல்லாம் மாறிவிட்டது. பின்னர் இயக்கம் மூன்றாக உடைந்தது அவர்களை ஒன்றிணைத்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற பணிகளை மேற்கொண்ட போது முதலில் எனது பொறுப்புகளை எடுத்தார்கள். தேவர் ஜெயந்திக்கு சென்றபோது எனது உறுப்பினர் பதவியை எடுத்துவிட்டார்கள். 

ஐம்பது ஆண்டுகள் உழைத்த எனக்கு இந்த உறுப்பினர் பதவியை எடுத்து பரிசு கொடுத்தார்கள், அதுமட்டுமல்லாமல் என்னுடன் சேர்ந்தவர்களையும் உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கினார்கள். இதற்கெல்லாம் மேலாக மகேஷ் என்பவரின் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரையும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். அதற்கு பிறகு தெளிவாக முடிவெடுத்து தான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைத்திருக்கிறேன். நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை இன்று அதிமுக திமுக வேறு வேறு இல்லை இரண்டும் ஒன்றாகத்தான் செயல்பட்டு வருகிறது. 

ஒரு தூய்மையான ஆட்சி தமிழகத்தில் அமைவதற்காக இன்று நம் இளவல் விஜய் மிகப்பெரிய கழகத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதற்கு காரணம் என்ன தமிழகத்திலே ஒரு மாற்றம் வேண்டும். இவர் மட்டும் தான் தமிழகத்தை ஆள வேண்டும் ஒரு புதிய மாற்றம் தேவை. எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என்ற பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். 2026 ல் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இளவல் விஜய் ஆட்சி அமைப்பார்” என பேசியுள்ளார்.

இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “எனக்கு மிகவும் நம்பகமான ஒரு தகவல் வந்தது. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்த 2 மாதங்களிலேயே செங்கோட்டையன் ஒரு ஆய்வறிக்கை ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் தந்துள்ளார். அதில் ‘பாஜக - அதிமுக கூட்டணி வெற்றிபெறுவது சாத்தியமற்ற ஒன்று. மேலும், அதிமுக - பாஜக இருவரின் ஓட்டுக்களை விஜய் உடைக்கிறார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இதற்கு பின்னணியில் பாஜக இருக்கலாம் என்ற சந்தேகமும்  எழுகிறது. ஆனால் மேற்கு மண்டலத்தில், விஜய் -க்கு நல்ல வரவேற்பு உண்டு. மேலும், செங்கோட்டையனின் இழப்புக்கு அதிமுக பெரும் விலை கொடுக்க நேரிடும்"விஜய் நிச்சயம் திமுக - அதிமுக ஓட்டுக்களை உடைக்கிறார். இது இருவரின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் தான்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.