
நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அடுத்த வேப்பங் கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான கோவிந்தராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பாரதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி கோவிந்தராஜ் மற்றும் பாரதி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு உணவருந்தி விட்டு பாரதி தனது மகனுடன் அறைக்குள் சென்று உறங்கியுள்ளார்,கோவிந்தராஜ் மற்றும் அவரது மூன்று மகள்கள் ஹாலில் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை மூன்று மணி அளவில் கோவிந்தராஜ் அவரது மனைவி மற்றும் மகன் உறங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டி விட்டு உறங்கி கொண்டிருந்த மூன்று மகள்களையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.பின்னர் தானும் வீட்டில் ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள்களின் அலறல் சத்தம் கேட்டு பாரதி கதவை திறக்க முயற்சித்துள்ளார், பின்னர் கதவு பூட்டு போட்டிருப்பதை அறிந்து அவரும் கூச்சலிட்ட நிலையில் அப்பகுதியில் வீடுகள் தொலைவில் அமைந்திருப்பதால் யாருக்கும் கேட்காமல் இருந்துள்ளது. பின்னர் அருகில் இருந்தவர்களை போன் செய்து வரவழைத்து கதவை திறந்து பார்த்தபோது மகள்களும் கணவர் கோவிந்தராஜும் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் கோவிந்தராஜ் ஆழ்துளை கிணறு தோண்டும் தொழில் மேலாளராக இருந்துவந்ததும், வீடு கட்ட மற்றும் தொழில் முன்னேற்றம் அடைய கோவிந்தராஜ் 20 லட்சம் கடன் வாங்கி அதை திரும்ப கொடுக்க முடியாமல் தவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரக்திஷா ஸ்ரீ(10), ரித்திகா ஸ்ரீ(7),தேவா ஸ்ரீ(6) என்ற தனது மூன்று பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
புது வீடு கட்டி இரண்டு வருடங்களான நிலையில் தற்போது பெற்ற மூன்று பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.