

புதுச்சேரி மாவட்டம், வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள பாண்டி மெரினா செல்லும் சாலையில் இன்று அதிகாலை உடலில் பல இடங்களில் வெட்டுக்காயதுடன் ரத்தவெள்ளத்தில் மிதந்த நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ்சாலை காவல் நிலைய போலீசார் கொலையான வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டது யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தது யார் என தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய சந்துரு என்பதும் இவர் சுமை தூக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சந்துரு, தன்னுடன் வேலை பார்க்கும் சுமை தூக்கும் தொழிலாளியான வம்பாகீரப்பாளையம் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் வெங்கடேசன் வீட்டிற்கு சந்துரு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.
அப்போது வெங்கடேசனின் மனைவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் வெளியில் சுற்றி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தனது மனைவியுடன் நண்பன் தகாத உறவில் இருப்பதை அறிந்த வெங்கடேசன் சந்துரு மற்றும் தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதனை சிறிது பொருட்படுத்தாமல் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் சந்துருவை கொலை செய்ய நினைத்துள்ளார். அதன்படி நேற்று வெங்கடேசன், சந்துருவை மது அருந்த அவரது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
சந்துருவும் அவர் அழைத்தபடி நேற்று இரவு வெங்கடேசன் வீட்டிற்கு மது அருந்துவதற்காக சென்றிருக்கிறார். அங்கு வெங்கடேசனுடன் அவரது நண்பர்களான சரண் மற்றும் ராஜேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது மனைவியுடனான உறவு குறித்து சந்துருவிடம் வெங்கடேசன் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. இதில் சந்துருவை அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.