“இன்ஸ்டா காதலனுக்கு கொடுத்த 26 பவுன் நகைகள்” - மொத்தமாக சுருட்டி கொண்டு ஓடிய இளைஞர்.. மூன்று நாட்கள் அலைந்து கைது செய்த போலீசார்!

இரண்டு முறை மட்டுமே லிவினைப் பார்த்த நிலையில் அவரது பெற்றோர்கள் மாணவியின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த சுமார் 26 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம்
“இன்ஸ்டா காதலனுக்கு கொடுத்த 26 பவுன் நகைகள்” - மொத்தமாக சுருட்டி கொண்டு ஓடிய இளைஞர்.. மூன்று நாட்கள் அலைந்து கைது செய்த போலீசார்!
Published on
Updated on
2 min read

இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதே பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் சிவகாசியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் நிலையில்  இவருக்கும் கர்நாடக மாநிலம் சிராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிவின் என்ற வாலிபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் லிவின் கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மையென நம்பி கல்லூரி மாணவியும் லிவினை காதலித்து வந்துள்ளார். 

லிவின் காதலிக்க தொடங்கிய சில நாட்களிலேயே மாணவியிடம் “நாம் திருமணம் செய்து கொள்ளலாம், நாம் திருமணத்திற்கு பிறகு தனியாக தான்  வாழ வேண்டும். எனவே உங்கள் வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வந்து என்னிடம் கொடு நான் சேமித்து வைக்கிறேன்” என கூறி மாணவியிடம் நகைகளை பறிக்க திட்டம் தீட்டியுள்ளார். லிவின் பற்றி அறியாத கல்லூரி மாணவியும் இரண்டு முறை மட்டுமே லிவினைப் பார்த்த நிலையில் அவரது பெற்றோர்கள் மாணவியின்  திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த சுமார் 26 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மதுரையில் வைத்து கல்லூரி மாணவி லிவினிம் வழங்கியுள்ளார்.

அதனைப் பெற்றுக் கொண்ட லிவின் தனது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த பணம் நகைகள் மாயமானது தொடர்ந்து செந்தில்குமார் தனது மனைவி மற்றும் மகளிடம் விசாரித்த நிலையில் கல்லூரி மாணவி தான்தான் அந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு போனதாகவும் அதை லிவினிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார் இதனை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே கல்லூரி மாணவிக்கு போன் செய்த லிவின் நீ கொடுத்த பணம் பத்தாது மேலும் பணம் வேண்டும் ஆகையால் அதை தயார் செய்து விட்டு கூப்பிடு என்று கூறியுள்ளார். 

இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்த கல்லூரி மாணவி தனது பெற்றோர் உதவியுடன் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி லிவினை இராஜபாளையம் ஆவாரம்பட்டிக்கு வரவழைத்து அவரிடம் கல்லூரி மாணவி பணத்தை கொடுக்க முயன்ற போது மறைந்திருந்த போலீசார் லிவினை சுற்றி வளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிய லிவின் தனது சொந்த மாநிலத்திற்கு ஓடிவிட்டார். 

இதனையடுத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் இராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் பெசீனா பிவி, அறிவுறுத்தலின்படி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக் பாபு தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் லிவினின் செல்போன் நம்பர் மூலம் லிவின் இருக்கும் இடத்தை அறிந்து கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் சிராஜ் பேட்டையில் வைத்து 3 நாட்கள் சிரமத்திற்கு பின் லிவினை கைது செய்தனர். 

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் தனது நண்பரின் மூலம் வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்திருப்பதாக அறிந்த போலீசார் 21 பவுன் தங்க நகைகளை மீட்டு லிவினை அழைத்துக் கொண்டு இராஜபாளையம் திரும்பினர். தொடர்ந்து லிவினிடம் விசாரித்த இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் சமூக வலைதளம் மூலம் லிவின் இந்த பெண்ணை மட்டும் தான் ஏமாற்றினாரா? அல்லது இது மாதிரி வேறு யாரையாவது ஏமாற்றி இருக்காரா என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி இராஜபாளையம் நீதித்துறை நடுவர் என் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சமூக வலைதள பழக்கத்தினால் 20 லட்சம் மதிப்பிலான நகைகளை ஆண் நண்பரிடம் கொடுத்த கல்லூரி மாணவியின் அப்பாவி தனமான செயல் இராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com