
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் இரு சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனது இரு குழந்தைகளையும் தாயே தொட்டியில் வீசியதாக உறவினர்கள் புகார் தெரிவித்ததால், வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35), கட்டிடத் தொழிலாளி இவரது மனைவி இளவரசி(30). இத்தம்பதியருக்கு விக்னேஷ் (6), சதீஷ்குமார்(3) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை இரவு விஜயகுமாரின் வீட்டிற்கு முன் வெட்டி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில், இத்தம்பதியரின் இரு குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த இவரது உறவினர்கள், இரு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது இரு மகன்களும் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடப்பதாக தகவலறிந்த கட்டிடத் தொழிலாளி விஜயகுமார், தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது, துக்கியாம்பாளையம் எம்ஜிஆர் நகர் அருகே எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி படுகாயம் அடைந்தார். வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற இவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தகராறில் ஆத்திரமடைந்து, தனது இரு குழந்தைகளையும், பெற்றத் தாயே தண்ணீர் தொட்டியில் தூக்கிப்போட்டு கொலை செய்ததாக, இவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, இளம்பெண் இளவரசியிடம் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்