
கருஞ்சீரகம் நமது உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு ஒரே தீர்வாக உள்ளது கருஞ்சீரகத்தை உட்கொள்வதால் ஏராளமான நன்மைகள் உண்டு.
மனிதனுக்கு எத்தனையோ வியாதிகள் வந்தாலும், நம்மை உச்சபட்ச அச்சத்தில் ஆழ்த்துவது ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்புதான்.
இந்த மாரடைப்பு வருவதை தடுக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்திற்கு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக மாரடைப்பு என்பது இதயத்திற்கு ரத்தம் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்தின் தசைகளுக்கு போதுமான ரத்தம் கிடைக்காமல் போகும்போது ஏற்படும் ஒரு நிலையைத்தான் மாரடைப்பு என்று கூறுகின்றனர்.
இதயத்திற்கு ரத்தம் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது கொழுப்பு படிவதால், தமனியில் ரத்தம் செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது.
கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நச்சுக்களை வெளியேற்றி, உடலில் படிந்துள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயத்திற்கு ரத்தம் செல்லும் தமனியில் ரத்தம் சீராக செல்கிறது.
அத்துடன், கருஞ்சீரகம் கெட்ட கொழுப்பை (Low-density lipoprotein ) குறைத்து, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை (High-density lipoprotein) அதிகமாக்குகிறது. இது ரத்தக் குழாய்களைப் பரவலாக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது.
கருஞ்சீரகம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பசியை அடக்கி, உடல் எடையை குறைக்க உதவுவதுடன் உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை குறைய வழி செய்கிறது.
வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வயிற்றில் ஏற்பட்ட புண்கள் விரைவில் ஆறிவிடும். மருந்து ,மாத்திரைகளை விட கருஞ்சீரகம் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுவதால் கருஞ்சீரகம் அல்சர் பாதிப்பை குறைக்கிறது.
தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினமும் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும்.
நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். அதனால் இவர்கள் தங்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்க உரிய உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், கருஞ்சீரகத்தை அளவோடு எடுத்துக் கொண்டால், சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை தவிர்த்துக் கொள்ளலாம். மேலும் கருஞ்சீரகம் கணைய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் ஓமம், வெந்தயம் சேர்த்து அரைத்து தினமும் இரவில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர உடலில் பல பிரச்சனைகள் குணமாகிறது.
கருஞ்சீரகம் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது. வெந்நீரில் தேன் மற்றும் கருஞ்சீரகப் பொடியைக் கலந்து உட்கொண்டு வர, சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை நன்மைகள் இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். ஒவ்வொரு நோய்க்கும் கருஞ்சீரகம் ஒவ்வொரு முறையில் பயன்படுத்தப்படுகிறது. கருஞ்சீரகத்தை நேரடியாக இல்லாமல் உணவுடன் சேர்த்து எடுக்கும் போது பாதுகாப்பானதாக உள்ளது. மேலும் கருஞ்சீரகத்தை மருந்தாக மருத்துவர் அனுமதியோடு எடுத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. அதிலும் கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுக்காமல், மூன்று மாதங்கள் அல்லது அதற்கு குறைவாக பயன்படுத்துவது நல்லது.
எத்தனை மருத்துவ குணங்கள் இருந்தாலும், அது எல்லோருக்கும் பொருந்துமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். கருஞ்சீரகத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் மாறுவதில்லை. ஆனால் மாறாக, ஒவ்வொருவரின் உடல் நிலையில் மாற்றம் இருக்கும். இதனால், இந்த கருஞ்சீரகம், வெகு அரிதாக, ஒரு சிலருக்கு, ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. வயிற்று வலி, வாந்தி, மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. இன்னும் சிலருக்கு வலிப்பு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை பரிசோதித்த பின்னரே பயன்படுத்துவது சிறந்தது. நீரிழிவு இருப்பவர்கள் மருந்துகளோடு கருஞ்சீரக விதைகளை தொடர்ந்து எடுத்து கொள்ளும் போது அது திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிட செய்யும். எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.
இத்தனை சிறப்புகளும், மருத்துவ குணங்களும் கொண்ட கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடவே கூடாது என்பதை முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் கருஞ்சீரகத்தை தொடவே கூடாது
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.