
நாமக்கல் மாவட்டம் மலைவேப்பங்குட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான கார்த்திக். இவர் பரமத்தி வேலூர் அடுத்துள்ள கோட்டணம் பாளையம் பகுதியில் தங்கி தோட்டத்து வேலைகள் பார்த்து வந்துள்ளார். அப்போது கார்த்திக்குக்கு அதே பகுதியை சேர்ந்த நித்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு கார்த்திக் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். நித்யாவின் தாய் ராசாத்தி, ராசாத்தியின் இரண்டாவது கணவர் ராஜேந்திரன், நித்யா மற்றும் கார்த்திக் என நால்வரும் ஒரு தோட்டத்து வீட்டில் தங்கி தோட்ட வேலைகளை பார்த்து வந்துள்ளனர், தற்போது கார்த்திக் மற்றும் நித்யா தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில் கார்த்திக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். எந்த வேலைகளையும் பார்க்காமல் தொடர்ந்து குடித்துவிட்டு மனைவி மற்றும் மாமனார் மாமியாரை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மாமனார் ராஜேந்திரன் பலமுறை கண்டித்தும் கார்த்திக் தனது குடிப்பழக்கத்தை விடாமல் தொடர்ந்து அனைவரையும் தொந்தரவு செய்துள்ளார், அதுபோல கடந்த (ஜூலை 29) அன்று இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக் மனைவி நித்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த நித்யா, அவரது தாய் ராசாத்தி மற்றும் மாமனார் ராஜேந்திரன் ஆகிய மூவரும் அருகில் இருந்த கட்டையால் கார்த்திகை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கார்த்திக் உயிரிழந்ததை அறிந்து கொண்ட ராசாத்தி குடும்பத்தினர், கார்த்திக்கின் தாய்க்கு போன் செய்து “உங்கள் மகன் குடிபோதையில் கீழே விழுந்து இறந்துவிட்டார்” என கூறியுள்ளனர். இதனை கேட்டு கார்த்திக்கின் தாய் தனது உறவினர்களுடன் நித்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். மருமகள் சொல்வது உண்மை என நம்பிய கார்த்திக்கின் தாய் அவரது சொந்த ஊரான மலைவேப்பங்குட்டையில் தனது மகனின் உடலை புதைக்க எண்ணி, இறுதி சடங்குகளுக்கு ஏற்படு செய்துள்ளார். இதற்கிடையே கார்த்திக்கின் 12 வயது மகன் அவரது தாயிடம் சென்று “பாட்டி அப்பா அவரை விழுந்து செத்து போல அம்மா, ராசாத்தி பாட்டி, தாத்தா எல்லாம் தான் அடிச்சாங்க அதனாலதான் அப்பா செத்துட்டாரு” என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக்கின் தாய் மற்றும் உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர், மேலும் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நித்யா, ராசாத்தி, ராஜேந்திரன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை பெட்ரா குழந்தைகள் கண்முன்னே மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.