நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை...!!

நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை...!!

தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  ஆலோசனைக் கூட்டம் கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.‌ நாடாளுமன்ற தேர்தலுக்குள் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியின் கட்டமைப்பை வலுவாக்க வேண்டும் என கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணி முடிவை எடுத்த கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது.  

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார்.  மேலும் மீண்டும் கோவையில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்களுக்கு எனது  வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இதையும் படிக்க:  2018ல் கொல்லப்பட்ட மீனவர்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்...!!!