பழனி: ரோப்காரில் ஏற்ற மறுத்த கோயில் நிர்வாகம்; படிக்கட்டில் தவிழ்ந்து வந்த 85 வயது முதியவர்!

பழனி: ரோப்காரில் ஏற்ற மறுத்த கோயில் நிர்வாகம்; படிக்கட்டில் தவிழ்ந்து வந்த 85 வயது முதியவர்!

பழனி முருகனுக்கு கோவிலுக்கு வந்த  வயதான முதியவரை மின் இழுவை ரயிலில் ஏற்றாதால் படிப்பாதை வழியில் தவழ்ந்து வந்த காட்சி பக்தர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன் என்கிற 85 வயதான பக்தர் தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார். பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்குவதற்காக ரோப்கார் நிலையத்தில் முருகேசன் குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர். அப்போது மின் இழுவை ரயிலில் ஏற சென்றபோது "நேரம் முடிந்து விட்டது" என்று கூறி ரோப் காரில் ஏற்ற மறுத்துள்ளனர். அப்போது அவருடன் வந்த குடும்பத்தினர் தங்களை ஏற்றிச் செல்லாவிட்டாலும், உடல்நலம் சரியில்லாத முதியவரை  மட்டுமாவது மின்இழுவை ரயிலில் ஏற்றி கொள்ளுமாறு கெஞ்சியுள்ளனர். இருந்தும் கூட அந்த முதியவரை ரோப் காரில் ஏற்ற அனுமதி மறுத்துள்ளனர். இதனால் வேறு வழியில்லால் அந்த முதியவர் படிக்கட்டுகள் வழியாக இறங்கி வந்தார். அப்போது அவரால் நடக்க முடியாமல் போனது மேலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அம்முதியவர் குழந்தையை போல தவழ்ந்தபடியே படியில் இறங்கி வந்துள்ளார்.

இதனை பார்த்த பக்தர்கள் மலையடிவாரத்தில் இருந்த செக்யூரிட்டிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த மனித நேயமுள்ள செக்யூரிட்டிகள், முதியவரை பாதுகாப்பாக இறக்க முயன்றனர். அப்போது அம்முதியவருக்கு மேலும் உடல் நலம் குன்றத் தொடங்கியது. பின்னர் அங்கிருந்து மரநாற்காலியில் அவரை அமர்த்தி மலையடிவாரம் வரை தூக்கி வந்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இக்காட்சி இதனை கண்ட பக்தர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்யும் நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மின்இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை தற்போது அவர்களுக்கு பயன்படாமல், பணம் படைத்தவர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் கோயில் நிர்வாகம் தலையிட்டு வயதான  பக்தரை ரோப்காரில் ஏற்றாமல் அலட்சியம் செய்த திருக்கோவில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றில் முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:ஜூன் மாதத்தில் 36 தீர்மானங்கள்!