செஸ் ஒலிம்பியாட் : வரும் 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!

செஸ் ஒலிம்பியாட் : வரும் 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும்  நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்அளுக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 ஆம் ஆண்டுக்கான தொடக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி சென்னையடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, அங்கு நிலவும் போரால் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் முதன்முறையாக நடைபெறவிருக்கிறது. இந்த போடியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வர இருக்கிறார்.

போட்டிக்கான எதிர்பார்ப்பு:

இந்தப் போட்டியில் சுமார் 200 நாடுகளிலிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொள்கின்றனர். இதனால் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. 

செஸ் ஒலிம்பியாட்டை பிரபலபடுத்தும் தமிழக அரசு:

வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை, தமிழக அரசு பல வழிகளில் பிரபல படுத்தி வருகிறது. அந்த வகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. “செஸ் தம்பி” என்று பெயரிடப்பட்ட இந்த சின்னம் குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல அமைந்திருக்கும். இந்த சின்னம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதேபோன்று, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோன்றும்  “வெல்கம் டு நம்ம ஊரு சென்னை” என்ற பாடலை உருவாக்கி பிரபலப்படுத்தினர். அந்த பாடல் சென்னை மாநகரின் பிரசித்தியான நேப்பியர் பாலத்தை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் சென்னை வருகை:

இப்படி முதன்முறையாக சென்னையில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. இதனிடையே செஸ் விளையாட்டில் பங்கேற்க உள்ள வீரர்களில், முதற்கட்டமாக 22 வீரர்கள் சென்னைக்கு வருகை தரவுள்ளனர். அதுவும் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகை தரவுள்ளனர். அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு:

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கான பணிகள் குறித்தும், போட்டி நடைபெறும் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

போட்டியை ஒட்டி உள்ளூர் விடுமுறை:

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நேற்று முதல்வர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று போட்டியை முன்னிட்டு  சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜுலை 28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கக்கூடிய நிலையில், 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக அரசு சார்பாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.