இழுபறியில் காங்கிரஸ் VS பாஜக: தடுமாறும் பாஜக...இமாச்சலில் ஆட்சி மகுடத்தை பிடிக்கப்போவது யார்?

இழுபறியில் காங்கிரஸ் VS பாஜக: தடுமாறும் பாஜக...இமாச்சலில் ஆட்சி மகுடத்தை பிடிக்கப்போவது யார்?

இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்த, முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், சிராஜ் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இமாச்சல பிரதேச தேர்தல்:

இமாசலப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

முன்னிலையில் காங்கிரஸ்:

இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று காலை முதலே வாக்கு எண்ணும் பணியானது தொடங்கியதையடுத்து, ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், ஆரம்பத்தில் இருந்தே பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. தொடர்ந்து 35 தொகுதிகளைத் தாண்டி காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், முப்பதைத் தாண்ட பாஜக திணறி வருகிறது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் ஏறு முகத்தை கொண்டுள்ள காங்கிரஸ் தான் வெற்றி பெரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே தேர்தலில் உள்ளடி வேலை பார்த்ததாகக் கூறி கட்சித் தலைவர்கள் 30 பேரை காங்கிரஸ் தலைமை அதிரடியாக  நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாஜகவின் கோட்டையை மீண்டும் தாமரையே அலங்கரிக்குமா? தொடர் முன்னிலையால் பரபரக்கும் அரசியல் களம்...!

பின்னடைவை சந்தித்த ஆம் ஆத்மி:

மேலும், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இணையாக தேர்தலில் களம் இறங்கிய ஆம்ஆத்மி ஒரு தொகுதியில் கூட இமாசலப்பிரதேசத்தில் முன்னிலை வகிக்கவில்லை என்பது சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது. சமீபகாலமாக ஆம் ஆத்மிக்கு கிடைத்த அபரிவிதமான தொடர் வெற்றியால் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தலில் ஆம் ஆத்மி புது வெற்றியை பதிக்கும் என்று அரசியல் அரங்கில் கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி பின்னடைவையே சந்தித்து வருகிறது. 

ஆட்சி மகுடத்தை பிடிக்கப்போவது யார்?:

இந்நிலையில் சிராஜ் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஜெய்ராம் தாகூர், 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், தொடர் முன்னிலையில் இருக்கும் காங்கிரஸ்க்கும், பாஜகவுக்கும் இழுபறி நீடிப்பதால் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி மகுடத்தை பிடிக்கப்போவது யார்? என்பதை அரசியல் ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.