இந்தியாவிற்கே முன்னோடியாக அமையும் தமிழகம்...முதலமைச்சர் பெருமிதம்!

இந்தியாவிற்கே முன்னோடியாக அமையும் தமிழகம்...முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு நிறைவு விழா:

சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1920 என்பது மிகமிக முக்கியமான ஆண்டு என கூறினார். ஏனென்றால், திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக் கட்சி முதன்முதலாக ஆட்சியமைத்த ஆண்டு இதுதான். அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவானது என்றும் தெரிவித்தார்.

இத்தகைய பங்காற்றிய இந்த நீதிக்கட்சியைத் தொடங்கிய  வெள்ளுடை வேந்தர் தான்,  1909 ஆம் ஆண்டு சென்னையில் வர்த்தகப்பிரிவு தலைவர்களை அழைத்து பேசி, முதன்முதலாக தென்னிந்திய வர்த்தகர் கழகத்தை உருவாக்கினார். இதையடுத்து 12 ஆண்டுகள் அந்த கழகத்தில் தலைமைப் பொறுப்பில் மட்டும் பணியாற்றாமல், ”சவுத் இந்தியன் டிரேட் ஜர்னல்” என்ற இதழையும் வெளியிட்டு வந்தார் என்பதை நினைவூட்டிய ஸ்டாலின், சமூக நீதியின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், சென்னை நகரின் தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியது திராவிட இயக்கம் என்பதால்தான், இந்த ஆட்சியின் இலக்காக அனைத்து துறைகளின் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாக வைத்திருப்பதாக கூறினார்.

இதையும் படிக்க: தீவிரவாதத்திற்கு நிதி கிடையாது...மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

இப்படி தொழில் முதலீட்டாளர்கள் ஒருங்கிணைந்து தங்கள் தொழில்கள் சிறந்து விளங்க உருவானதுதான், தென்னிந்திய வேலை அளிப்போர் சங்கம். அந்த சங்கம் தற்போது 10 லட்சத்துக்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு,  சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவிவருவது பாராட்டுக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றை ஆண்டுகளில் தமிழகத்தில் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதேபோல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து தமிழகத்தில் நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். அந்த வகையில், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

இதையும் படிக்க: ஆளுநர்களை பயன்படுத்தி பாஜக போட்டி ஆட்சி...குற்றம்சாட்டும் பாலகிருஷ்ணன்!

மேலும், தமிழ்நாடு நலவாரிய ஓய்வு இல்லத்தை புனரமைக்க ஏழரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்ற வருவதாக கூறிய முதலமைச்சர், இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர்,  திமுக அரசின் செயற்பாடுகளால், தமிழ்நாடு, பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.