இளைஞரணியா? மகளிரணியா? திமுகவுக்குள் போட்டா போட்டி..!

கனிமொழியின் அறிக்கையால் பரபரப்பான பெண் நிர்வாகிகள்..!

இளைஞரணியா? மகளிரணியா? திமுகவுக்குள் போட்டா போட்டி..!

என்னத்தான் 10 வருடங்களுக்கு பிறகு திமுக அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தாலும் கூட, கொங்கு மண்டலத்தில் வெற்றி பெறவில்லை, சீனியர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் சிக்கல் என பல தரப்பட்ட உட்கட்சி பூசல்களும் நிலவிக் கொண்டு தான் இருந்தது. இப்போது என்னவென்றால் சொந்த குடும்பத்துக்குள்ளேயே பிரச்னை எழுந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மகளிரணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா என கனிமொழி எம்.பி உதயநிதிக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார். திமுக உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது என்பதற்காக மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்த வேண்டும். 100 பேர்களில் 30 பேர் திமுக உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்று ஆணையிட்டார். அதன் பேரில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் நடைபெற்ற கழக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். 

ஏற்கனவே திமுக இளைஞரணியில் இளம்பெண்கள் அணி ஒன்று உருவாக்கப்படவிருந்தது. அதற்காக 18 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களை இளைஞரணியில் சேர்க்கப்பட்டு வந்தார்கள். இதற்கு மகளரணி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்திற்காகவே இளம் பெண்களை இளைஞரணியில் சேர்த்து கட்சியின் உறுப்பினர்களாக காட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இது குறித்து திமுக மகளரணி செயலாளரான கனிமொழி எம்பிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றுள்ளார் கனிமொழி. அத்தோடு நில்லாமல் உதயநிதியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்குவதற்கு சில மணி நேரம் முன்பாக, சுடச் சுட ஒரு அறிக்கையை கனிமொழி வெளியிட்டிருந்தார். அதில்,  “கொள்கை உறுதிகொண்ட இளைஞர்களாலும், எழுச்சிமிக்க பெண்களாலும் கட்டமைக்கப்பட்ட பேரியக்கம் நமது கழகம். நமது கழகத்தின் அடித்தளமாக விளங்கும் இளைஞர்கள் பலரை நம் கொள்கைகள் சென்றடையவும், நமது கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் நம் கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.12.2021 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

தமிழகத்தின் மக்கள் தொகையில் சரிசமமான பங்குடையவர்கள் பெண்கள், அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள் இன்றிருக்கும் 18-30 வயதுடைய இளம் பெண்கள். நமது கழகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த இளம் பெண்களின் பங்கு இன்றியமையாதது. திராவிட முன்னேற்ற கழகத்தின் மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே அரசியலில் பெண்கள் தனக்கென உரிமைகளை உருவாக்குவது. நமது கழக மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும். அந்த விதத்தில் இன்றிருக்கும் 18-30 வயதிற்குள்ளான இளம் பெண்களை நமது கழகத்தில் 'மகளிரணி உறுப்பினர்களாக' இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அரசியலில் ஆர்வம் காட்ட துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18-30 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கழகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம். இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே துவக்கி, இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் சம்மந்தமான தகவல்களை அணித் தலைமையுடன் தினந்தோறும் பகிருமாறு கேட்டுக்கொள்வதாக கனிமொழி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பொதுவாகவே கனிமொழி அறிக்கை விடுவது என்பது அபூர்வமாகவே நடக்கும். இப்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை, தனது குடும்ப உறுப்பினருக்கு எதிராக வெளியிடப்பட்டிருப்பது திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.