தமிழ்நாட்டிலும் தலைவிரித்து ஆடும் வரதட்சணைக் கொடுமை…

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் மட்டுமல்லாமல் காதல் திருமணங்களிலும் வரதட்சணைக் கொடுமைகள் எல்லை மீறுவதால் இளம்பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த சில நாட்களாக வரதட்சணைக் கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில் சென்னையில் திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆன இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் தலைவிரித்து ஆடும் வரதட்சணைக் கொடுமை…

தென் இந்திய மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் வரதட்சணைக் கொடுமைகள் தலைவிரித்தாடுவதை தினசரி செய்திகள் மூலம் கண்கூடாக பார்த்து வருகிறோம். படித்த பெண்களாக இருந்தாலும் வரதட்சணைக் கொடுமைகளுக்கு உள்ளாகி ஒருபுறம் தற்கொலை முடிவுக்குச் செல்வதும் மறுபுறம் மணமுடித்து வந்த இளம்பெண்களை தற்கொலைக்குத் தூண்டி உயிரைக் காவு வாங்கும் அவல நிலைகளும் அரங்கேறி வருகிறது. சட்டங்கள் பலமுறை திருத்தப்பட்டாலும் தீர்வு என்பதை எட்டாத ஒரு நிலையே வரதட்சணைக் கொடுமைகளில் தொடர்ந்து நிலவி வருகிறது எனறுதான் சொல்லவேண்டும்.

 சமீபத்தில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமையால் இரு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2018 ஆம் ஆண்டு பத்தணம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த உத்ராவை திருமணம் செய்ததோடு 112 சவரன் தங்க நகைகள், கார் என வரதட்சணையும் பெற்றார். அதுபோதாதென அவ்வப்போது பணத்தை பெண் வீட்டாரிடமிருந்து பெற்றும் திருப்தி அடையாமல் விஷப் பாம்பைக் கொண்டு கடிக்கச் செய்து மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடினார். பின்னர் விசாரணையில் போலீசாரிடம் சிக்கி கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 அதேபோல கொல்லம் மாவட்டத்தின் மற்றொரு பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா கணவன் வீட்டு குளியலறையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி பிணமாக தொங்கினார். 100 சவரன் தங்க நகைகள் உட்பட பெருமளவில் வரதட்சணை பெற்றும் விஸ்மயாவிற்கு அவரின் கணவன் மற்றும் குடும்பத்தார் அளித்த வரதட்சணைக் கொடுமை குறித்த விவரங்களும், அவரின் கணவர் கிரண் குமார் விஸ்மயாவை தாக்கிய புகைப்படங்களும், விஸ்மயா தனது உறவினர்களுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் மூலம் போலீசாருக்கு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அரசுப் பணியாளரான கிரண் குமாரும் கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் 66 பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளால் கொலை மற்றும் தற்கொலையில் உயிரிழந்துள்ளதாகவும், கேரள பெண்கள் மூலம் வரதட்சணைக் கொடுமை ஏற்பட்டதாக 15 ஆயிரத்து 143 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அங்குள்ள காவல் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 இப்படி வரதட்சணைக் கொண்டுமைகளால் கேரளத்தில் தான் இளம்பெண்கள் தற்கொலை அதிகரித்து வருவதாக நினைத்தால், தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல என்றுதான் கூறவேண்டும். ஆம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை வெளியிட்டுள்ள தரவுகளில் மட்டும் 190 பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளால் கொலை மற்றும் தற்கொலைகளால் உயிரிழந்துள்ளதாகவும், இந்த ஆண்டுகளில் மொத்தமாக வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்டதாக பெண்கள் மூலம் 963 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. வெளிவந்த புகார்கள் இவ்வளவு என்றால் இன்னும் பெண்களுக்கு எதிரான பல வரதட்சணைக் கொடுமை புகார்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டு விடுவதாகவும் கூறுகிறார் குற்றவியல் வழக்கறிஞர் கண்ணதாசன்.

 நாட்டில் தற்கொலை அதிகம் செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழ்நாடு 2 ஆம் இடத்திலும், தமிழ்நாட்டில் அதன் தலைநகரான சென்னை முதல் இடத்திலும் இருப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலையும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன. இந்த தற்கொலை எண்ணிக்கைகளில் ஒரு பங்கு வரதட்சணைக் கொடுமையால் நிகழ்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக சென்னை பெரம்பூர் நீலம் காலணி பகுதியைச் சேர்ந்த 21 வயதே நிரம்பிய ராமச்சந்திரன் மற்றும் கீர்த்தனா ஆகிய இரு இளம் சிட்டுக்கள் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த வியாழக் கிழமை ராமசந்திரனின் மனைவியான இளம்பெண் கிருத்திகா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று (17.07.2021) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராமசந்திரனும் அவரது குடும்பத்தாரும் தனது தங்கையை வரதட்சணைக் கொடுமைக்கு உள்ளாக்கியதாக உயிரிழந்த இளம்பெண் கீர்த்தனாவின் சகோதரி போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். திருமணமாகி ஆறே மாதத்தில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அளிக்கப்பட்ட புகார் போலீஸ் விசாரணையில் இருந்தாலும், இச்செய்தி சென்னை வாசிகளுக்கு மீண்டும் ஒரு விஸ்மயாவையும், உத்ராவையும் நினைவூட்டிச் சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வரதட்சணைக் கொடுமைகள் மட்டுமல்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடியோடு ஒழிக்க மிக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதே சமூக அக்கறையுள்ள பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.