பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்ந்தெடுக்க அறிவுறுத்த வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி மனு!

பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்ந்தெடுக்க அறிவுறுத்த வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி மனு!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், வருகிற ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்ந்தெடுக்க அறிவுறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஒற்றை தலைமையை விரும்பும் இ.பி.எஸ், விரும்பாத ஓ.பி.எஸ்: 

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காக 23 தீர்மானங்கள முன்கூட்டியே தயாரிக்கப்பட்டன. ஆனால் அதில் ஒற்றைத் தலைமை குறித்து எதுவும் இல்லை. ஆகவே பொதுக்குழு நடக்கும் போது அவசர தீர்மானம் கொண்டுவர எடப்பாடி தரப்பினர் முடிவு செய்தனர். இதை ஓ.பி.எஸ் விரும்பவில்லை. இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என அறிவித்தார்.

ஆனால் எடப்பாடி ஒற்றைத் தலைமையில் உறுதியாக இருந்தார். ஆகவே இந்த கூட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிதாக எந்த தீர்மானத்தையும் கொண்டுவரக்கூடாது என நிபந்தனை விதித்தது. ஆனால் அந்த 23 நிபந்தனைகளும் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டன. 

மேலும் கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இரங்கல் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும்,அன்றைய தினம் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அதிமுக நிர்வாகிகள் அறிவித்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என ஓ.பி.எஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டி மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினர். அத்துடன் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

ஆனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதற்கான மனுவை தனி நீதிபதியிடம் முறையிடலாம் என கூறிவிட்டது. ஆகவே அதிமுக பொதுக்குழு நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு:

இப்படிப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் எம்பியான கே.சி. பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கட்சியின் உயர்ந்த பதவிக்கு உரிய நபர்களை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்பது அதிமுகவின் விதி. 

ஆனால் 2017 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. புதிதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுச்செயலாளருக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் இந்த இருவருக்கும் மாற்றப்பட்டன. ஆனால் இவர்கள் இருவருக்கும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆகவே இந்த இருவரால் செய்யப்பட்ட நியமனங்கள் மற்றும் நீக்கங்கள் அனைத்தையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளகளை கட்சியின் தொண்டர்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கலாம் என்று  திருத்தம் செய்யப்பட்டது. ஆகவே பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்யும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும் இவ்வாறு கே.சி.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.