பொறியியல் படிப்பை கைவிட்ட 14 தனியார் பல்கலைக்கழகங்கள்...

தமிழ்நாட்டில் உள்ள 14 தனியார் பல்கலைக்கழகங்கள், போதிய வரவேற்பு இல்லாததால் 102 பொறியியல் படிப்புகளை கைவிட்டுள்ளதாக AICTE தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பை கைவிட்ட 14 தனியார் பல்கலைக்கழகங்கள்...

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு புதிய படிப்புகளுக்கு அனுமதி வழங்குவது, பழைய படிப்புகளை நீக்குவது, மாணவர் சேர்க்கையைக் கண்காணிப்பது, பேராசிரியர்களின் எண்ணிக்கை & தகுதியை சரிபார்ப்பது போன்ற பணிகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மேற்கொண்டு வருகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என்று கடிதம் எழுதி உள்ளதாக AICTE தெரிவித்திருந்தது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள 16 பொறியியல் கல்லூரிகளும் அடங்கும் சூழலில், மேலும் 14 தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 102 பொறியியல் படிப்புகளை கைவிடுவதாக AICTE தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் சிவில், EEE, EIE, Power Electronics, Automobile Engineering, Nana Science and Technology, VLSI design and Architecture போன்ற படிப்புகளை கைவிடுவதாக AICTE இடம் தெரிவித்துள்ளன.

புதிய பொறியியல் படிப்புகளுடன், பாரம்பரியமான சிவில் படிப்பையும் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கைவிடுவதாகவும், கடந்த ஆண்டுகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததையும் சுட்டிக்காட்டி 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் AICTE-க்கு கடிதம் எழுதி உள்ளன.

மாணவர்கள் இல்லாத சூழலில் புதிய படிப்புகளுக்கு பேராசிரியர்களை நியமித்து, பராமரிப்பதில் தேவையற்ற செலவினங்கள் ஏற்படுவதாகவும், மாணவர்கள் சேராத படிப்புகளை கைவிட்டால், பிற படிப்புகளுக்கு போதிய பேராசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என்றும் AICTE-இடம் கடிதம் வாயிலாக நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்பதாகவும், மாணவர்கள் சேராத நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் படிப்புகளை கைவிட அனுமதி வழங்குவதாகவும் AICTE தெரிவித்துள்ளது.